நாட்டின் ஜீவாதார பிரச்சனைகள் எத்தனையோ இருக்கும் போது, அவற்றிலிருந்து நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்பும் விதமாக முத்தலாக் அவசர தடை சட்டத்தை மத்திய அமைச்சரவை நிறைவேற்றியது கண்டிக்கதக்க செயலாகும். இதற்கு குடியரசு தலைவர் உடனே ஒப்புதல் அளித்திருப்பது ஏமாற்றமளிக்கிறது.
நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பை இச் சட்டம் சந்தித்தது. மற்றும் மாநிலங்கள் அவையில் இச்சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. இம்மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு இருந்தது. இந்நிலையில், இதை நிலைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என அனைவரும் வலியுறுத்தினர். நாடெங்கிலும் போராட்டங்கள் நடைப்பெற்றது. கண்டனங்கள் வலுத்தது.
இந் நிலையில் அவசரகதியில் மத்திய அமைச்சரவை கூடி எதற்காக இச்சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்?
இதுபற்றி முஸ்லிம் சமூகத்தின் பொது அவையான அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் தலைவர்களோடு ஏன் விவாதிக்கவில்லை?
ஒரு சமூகத்தில் எங்கேயாவது கவனக்குறைவாக, அல்லது விதிவிலக்காக ஒரு தவறு நிகழுமேயானால் அதை கவுன்சிலிங் செய்து, சரி செய்யும் பணியை அச்சமூக தலைவர்களையும், ஆன்மீக வழிகாட்டிகளையும் கொண்ட குழு மூலம் செய்யலாமே…
முத்தலாக் விவகாரத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த, நாடெங்கிலும் உள்ள வக்பு வாரியங்கள் மூலம் மாவட்ட வாரியாக கவுன்சலிங் மையங்களை கூட அமைக்கலாம். இது குறித்து முஸ்லிம் சமூக தலைவர்களுடன் கலந்து பேசியிருக்கலாம்.
ஆனால், இதனை ஒரு குற்றவியல் தண்டனையாக மாற்றி அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை என்பது அநீதியாகும்.
இந்தியாவில் பல்வேறு மதங்களில் மூட நம்பிக்கைகளின் பெயரால் பெண்கள் பல்வேறு அநீதிகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். அதுபோன்ற அநீதிகள், சமூக கொடுமைகளை முஸ்லிம் பெண்களுக்கு இல்லை. அது போன்ற அநீதிகளை கண்டு மெளனம் காப்பவர்கள், முஸ்லிம் பெண்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். குஜராத்தில் முஸ்லிம் பெண்களை ஓட ஓட கற்பழித்தவர்கள், அதை நியாயப்படுத்தியவர்கள் இன்று ஆடு நனைகிறதே என ஒநாய் அழுத கதையாக நடிக்கலாமா?
இச்சட்டம் இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது. பொது சிவில் சட்டத்திற்கு முன்னோட்டம் பார்க்கிறது என கண்டிக்கிறோம்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மத்திய அரசின் தோல்விகள் ஆகியவற்றிலிருந்து நாட்டு மக்களை திசை திருப்ப மத்திய அரசு எடுத்திருக்கும் குள்ள நரித்தனமான முடிவு என குற்றம் சாட்டுகிறோம்.
இச்சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.
இல்லையேல், ஜனநாயக சக்திகளுடன் இணைந்து வெகு மக்கள் போராட்டத்தை முன்னெடுப்போம் என்பதை தெரிவித்துக்கொண்டனர்.