[youtube https://www.youtube.com/watch?v=zJOBOXEAOaw?rel=0&showinfo=0]
இன்றைய சூழலில் பல தம்பதிகள் குழந்தை இல்லாமல் மிகவும் வருத்தமுற்று மன உளைச்சளுக்கு ஆளாகி வருவதை நாமும் கண்கூடாக தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இப்படியிருக்கும் நிலையில் நேற்று (15-08-2018) சுதந்திர தினத்தன்று சென்னை வளசரவாக்கத்தில் ஓர் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது.
ஆம்..! தான் பெற்ற பிள்ளையையே சாக்கடை கழிவு கால்வாயில் தாய் வீசிய சம்பவம்.
தன் பெயர் சொல்வதற்கென்று ஒரு குழந்தை இல்லையே என காலம் முழுதும் கலங்கிய கண்களுடன் ஏங்குவோர் பலர் இச் சமூகத்தில் நமக்கு முன்னால் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
குழந்தை பிறந்து வெறும் இரண்டு மணி நேரம் ஆவதற்குள்ளாக கால்வாயில் தூக்கியெறியபட்ட அக் குழந்தையை சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த பெண் கீதா என்பவர் குழந்தையின் அழு குரலை கேட்டு ஒவ்வொரு இடமாக தேடி கடைசியில் கால்வாயில் இருந்து தான் சப்தம் வருகிறது என்று ஊர்ஜிதப்படுத்தி குழந்தையை கண்டுபிடித்து காப்பாற்றியுள்ளார்.
தொப்புள் கொடி கூட முழுமையாக அறுந்திடாத அந்த பிஞ்சுக் குழந்தையை சாக்கடை கழிவு நீர் அடித்துச் செல்லட்டும் என்று தூக்கி எறிந்திருக்கிறார் அந்த கொடூர தாய்.
இவையனைத்தும் அரங்கேறிய இடம் சென்னை வளசரவாக்கத்தில் SVS நகர் 6வது தெருவில் தான்.
பெத்த மனம் பித்து., பிள்ளை மனம் கல்லு என்கிற பழமொழியை தான் நாம் கேட்டிருக்கிறோம். ஆனால் இச் சம்பவம் ‘பெத்த மனம் கல்லு’ என்பதை அந்த கொடூர தாய்க்கு மிக ஒப்பானதாக இருக்கிறது.
பெண் கீதா, குழந்தையை காப்பாற்றிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதையடுத்து மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவரை அழைத்து பாராட்டியிருக்கிறார்.
தமிழகத்தில் இப்படியொரு சம்பவம் அரங்கேறியதை அறிந்து குழந்தை இல்லாமல் ஏங்கி தவிக்கும் தம்பதிகளின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கிறது.
இப்படியொரு ஈனச் செயலை செய்திருக்கும் அந்த கொடூர மனம் கொண்ட தாயை போலீசார் தேடி வருகின்றனர்.
சுதந்திர திருநாளில் கண்டெடுத்த அந்த குழந்தையை சென்னை எழும்பூரில் உள்ள காப்பகத்தில் சேர்த்து, சுதந்திரம் என்று அக் குழந்தைக்கு பெயர் சூட்டபட்டுள்ளது குறிப்பிடதக்கது.