தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி மறைவுக்குப் பின் முதலாவதாக செயற்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
சென்னை அன்னா அறிவாலயத்தில் இன்று காலை, 10 மணிக்கு நடக்கவுள்ள, இந்தக் கூட்டத்திற்கு செயல் தலைவர், முக.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாநில நிர்வாகிகள் என 750 பேர் பங்கேற்க உள்ளனர்.
முன்னதாக, கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் நிர்வாகிகள் பேசுவர். அடுத்த தலைவராக முக.ஸ்டாலினை பொதுக்குழுவில் தேர்வு செய்து குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
அதிலும் குறிப்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் முக.அழகிரியை கட்சியில் சேர்ப்பதா வேண்டாமா என்பது குறித்தும், அவரால் எழுந்துள்ள சர்ச்சை பற்றியும் விவாதிக்கப்படும் என தெரிகிறது.
கலைஞரின் மறைவுக்குப் பிறகு திமுகவின் அடுத்த நிலைப்பாடு எப்படியாக இருக்கும் என்பதனை இக் கூட்டம் உறுதிப்படுத்தும் என்று திமுக தொண்டர்கள் நம்புகின்றனர்.