அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு அருகில் உள்ள கடைகளில் பெரிய நிறுவனங்களின் பெயரில் போலியான , தரம் குறைந்த குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
தரமில்லாத பொருட்கள், அனுமதிக்கப்படாத நிறமூட்டிகள் , பாதுகாக்கப்படாத தண்ணீர் போன்ற பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் இந்த குளிர் பானங்களால் வயிற்றுப்போக்கு , புற்றுநோய் வரவும் வாய்ப்புள்ளது.
இதுபோன்ற தரமற்ற குளிர்பானங்கள் பட்டுக்கோட்டையிலிருந்து வருவதாகவும் அதிரையில் உள்ள வீடுகளில் தயாரிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் தரமற்ற உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய வேதிப்பொருட்களும் கலக்கப்படுவதாக புகார் வந்துள்ளன. மேலும் இது பிளாஸ்டிக் பையில் அடைத்து விற்பனை செய்யப்படுவதால் , குழந்தைகள் அதனை உறிஞ்சும்போது பிளாஸ்டிக் துகள்களும் அவர்களை அறியாமலேயே அவர்களின் உடம்பிற்குள் செல்லும் அபாயமும் உள்ளது.
எனவே பள்ளிக்குழந்தைகளின் நலன் கருதி பள்ளிகளுக்கு அருகில் விற்கப்படும் இந்த தரமற்ற குளிர்பானங்களை விற்பதற்கு தடைவித்து உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுப்பதுடன் , மீறி விற்போர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு இந்த தரமற்ற குளிர்பானம் அருந்துவதன் தீங்கை எடுத்துரைத்து , அவர்கள் அதனை வாங்கி அருந்துவதை விட்டும் பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.