அதிரை அரசு மருத்துவமனையில் அதிரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏழை எளிய மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தினமும் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்நிலையில் அதிரை அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே அறையில் ஊசி போடப்படுகிறது. மருத்துவமனையின் உள்ளே உள்ள ஒரு சிறிய அறையில் வைத்து இருபாலருக்கும் ஒரே நேரத்தில் ஊசி போடப்படுகிறது. அந்த அறையிலேயே கூட பெண்களுக்கு என மறைவான பகுதியோ இல்லை.
அந்த அறைக்கு கதவுகள் கூட இல்லை. அறையின் வாயிலில் ஒரு துணியை கட்டி மறைத்திருக்கின்றனர். அந்த அறையின் வாயிலில் கண்காணிப்பு கேமராவும் உள்ளது. இவ்வாறு ஒரே அறையில் வைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஊசி போடப்படுவதால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.
அதேபோல் இரவு நேரங்களில் விபத்துகளில் சிக்கி அதிரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் செல்பவர்களுக்கு அங்கு பணியாற்றும் துப்புரவு ஊழியர்களே முதலுதவி சிகிச்சை அளிக்கும் அவல நிலை உள்ளதாகவும் , அவர்களே நோயாளிகளுக்கு ஊசி போடுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாற்றுகின்றனர்.
எனவே அதிரை அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக ஊசி போடும் விதத்தில் தனித்தனி அறைகளை உடனே அமைக்க வேண்டும் என்றும் இரவு நேரங்களில் அதிரை அரசு மருத்துவமனையில் ஒரு மருத்துவரை பணியில் அமர்த்த வேண்டும் எனவும் அதிரை அரசு மருத்துவமனை நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கிறோம்.