அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் சார்பில் பொதுக்குழு கூட்டம் 17.06.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு அதிராம்பட்டினம் ரிச்வே கார்டன் மினி ஹாலில் நடைபெற்றது. பொதுக்குழுவிற்கு மன்ற தலைவர் வ. விவேகானந்தம் தலைமை வகித்தார். துணை செயலாளர் மரைக்கா கே.இதிரிஸ் அஹமது முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் எஸ். முஹம்மது இப்ராகிம் வரவேற்புரையாற்றினார். சுற்றுச்சூழல் மன்றத்தின் நிறுவனர் ஹாஜி. எம். எஸ். தாஜூதீன் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மகளிர் மற்றும் மாணாக்கர்களின் பங்கு பற்றி சிறப்புரை ஆற்றினார். செயலாளர் எம். எப். முஹம்மது சலீம் ஆண்டறிக்கை மற்றும் வரவு செலவு அறிக்கையை வாசித்தார்.
பொதுக்குழுவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன :
★2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த தமிழக அரசுக்கும், தமிழக அரசின் பசுமை விருது பெற்ற தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
★அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் குறிப்பிட்ட வார்டுகளில் குப்பைகளை சேகரித்து உரம் தயாரிக்கவும், அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒத்துழைப்புடன் மாணவ, மாணவிகளுக்கும், மகளிருக்கும் குப்பைகள் பராமரிப்பு, உரம் தயாரித்தல், வீட்டு தோட்டம் அமைத்தல் ஆகிய பயிற்சி முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
★அதிராம்பட்டினம் பேரூராட்சி சார்பில் வீடுகள் தோறும் விடுபடாமல் குப்பைகளை தரம் பிரித்து தினந்தோறும் வாங்கவேண்டும்.
★பொது இடங்களில் குப்பைகளை கொட்டி மாசு படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
★டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டு முன்னெச்சரிக்கை பணிகளை விரைந்து துவங்க வேண்டும்.
★நீர் நிலைகளில் குப்பைகள் சேராமல் பராமரிக்க வேண்டும். பேரூராட்சி குப்பை கிடங்கில் குப்பைகள் எரிவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.