தஞ்சை பெரிய கோயிலில் தரைத்தளத்தை புதுப்பிப்பதற்காக அகற்றிய பழைய கற்களை அடுக்கி வைத்து பக்தர்கள் நூதன வழிபாடு நடத்தி வருகின்றனர்.
தஞ்சை பெரிய கோயில் எனும் பிரகதீஸ்வரர் கோயிலை 1,000 ஆண்டுகளுக்கு முன் ராஜராஜசோழன் கட்டினார். இந்த கோயிலுக்கு தினம்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோயிலில் அடுத்தாண்டு கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்காக பல லட்ச ரூபாய் செலவில் கோயிலின் சுற்று பிரகார தரைகளில் புதிதாக கற்கள் பதிப்பதற்காக பழைய கற்களை அகற்றும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக கோயிலுக்கு வரும் பக்தர்கள், நலமுடன் வாழ வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும், வீடு கட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பிரார்த்தனை செய்து பிரகார தரையில் இருந்து பெயர்த்து வைக்கப்பட்டுள்ள கற்களை எடுத்து ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கி வைத்து நூதன வழிபாடு நடத்தி வருகின்றனர். இதுகுறித்து சென்னையை சேர்ந்த பக்தர் கூறுகையில், பிரகதீஸ்வரர் எங்களுடைய கஷ்டத்தை போக்குவார் என்ற நம்பிக்கையில் கோயிலுக்கு வந்தோம். அப்போது தான் இப்படி ஒரு நூதன வழிபாடு இருக்கிறது என்று தெரிந்தது. இதனால் நாங்களும் கற்களை அடுக்கி வைத்து நூதன வழிபாடு நடத்தினோம். ராஜராஜசோழன் கட்டிட கலையில் சிறந்தவர் என்பது வரலாறு. அதனால் நாங்களும் சொந்தமாக வீடு கட்ட வேண்டுமென வழிபாடு நடத்தினோம் என்றார்..