பெண் பத்திரிக்கையாளர் குறித்து எஸ்வி சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் தரக்குறைவான கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அவரது கருத்துக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு எழுந்த நிலையில் அவர் மீது பல்வேறு காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.
இதுதொடர்பான வழக்கில் எஸ்வி சேகர் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். எஸ்வி சேகரின் இழிவான கருத்தை கண்டித்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
எஸ்வி சேரை கைது செய்ய தமிழக அரசும் தயக்கம் காட்டி வந்தது. எஸ்வி சேகர் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் உறவினர் என்பதாலும் தமிழக பாஜக நிர்வாகிகளில் ஒருவர் என்பதாலும் இந்த தயவு காட்டப்பட்டதாக புகார் எழுந்தது.
ஆனாலும் போலீசாருக்கு போக்கு காட்டி கடந்த 2 மாதங்களாக தலைமறைவாக இருந்து வருகிறார் எஸ்விசேகர். இந்நிலையில் அவர் முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அதனை விசாரித்த உச்சநீதிமன்றம், எஸ்வி சேகருக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது. எஸ்வி சேகரை கைது செய்ய தடையில்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் எஸ்வி சேகர் விசாரணை நீதிமன்றமான சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் எஸ்வி சேகரை கைது செய்ய இன்று வரை விதித்திருந்த தடையையும் நீக்கிக்கொண்டது உச்சநீதிமன்றம்.
எஸ்வி சேகரின் முன்ஜாமீன் வழக்கில் உச்சநீதிமன்றம் கைவிரித்ததால் அவர் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.