நீங்க தக்காளியை விரும்பி சாப்பிடுபவர்களா… அப்போ சந்தோஷமாக இருங்க. புற்றுநோயில் இருந்து தப்பிக்கலாம்.
தினமும் உணவில் தக்காளி சேர்த்துக் கொள்வதால் புற்றுநோயில் இருந்து ஆண்கள் தப்பலாம் என்று இத்தாலி ஆய்வு தெரிவித்துள்ளது.
இத்தாலியை சேர்ந்த நேப்பிள்ஸ் பல்கலைக்கழக உணவியல் ஆராய்ச்சியாளர்கள், ஆண்களுக்கு ஏற்படும் ப்ராஸ்ட்ரேட் கேன்சரை (ஆணுறுப்புடன் இணைந்த உட்புற சுரப்பியில் ஏற்படும் புற்றுநோய்) தடுக்கும் இயற்கை உணவுகள் பற்றி ஆய்வு நடத்தினர். புகையிலை, மது பழக்கம் இல்லாதவர்களையும் அதிகளவில் பாதிக்கும் நோயாக ப்ராஸ்ட்ரேட் கேன்சர் உள்ளதால், அதை தடுப்பதில் தக்காளியின் பங்கு பற்றி ஆராயப்பட்டது.
மருத்துவ ஆராய்ச்சிகளில் மனித உடல் அமைப்புக்கு பொருந்தக்கூடிய எலிகளிடம் தினமும் தக்காளி சேர்த்த உணவு தரப்பட்டு வந்தது. தக்காளி தவிர்த்த உணவுகளை சாப்பிட்டு வந்த எலிகளைவிட தக்காளி சாறு அதிகம் கலந்த உணவுகளை சாப்பிட்டு வந்த எலிகளுக்கு உடல்நல குறைவே ஏற்படவில்லை. அத்துடன் வாழ்நாள் அதிகரித்தது.
ஆண் எலிகளிடம் ப்ராஸ்ட்ரேட் கேன்சர் ஏற்படுவதை தக்காளி தடுத்திருந்தது. ஏற்கனவே அந்நோய் தாக்கிய எலிகளுக்கும் புற்றுநோய் கட்டியின் வளர்ச்சி தடைபட்டிருந்தது சோதனையில் தெரிய வந்தது. இத்தனைக்கும் மற்ற எலிகளைவிட 10 சதவீதம் மட்டுமே பவுடர் வடிவ தக்காளி சாறு கலந்து உணவு தரப்பட்டு வந்தது.
இதையடுத்து, தக்காளியில் சிவப்பு நிறத்தை ஏற்படுத்தும் லைகோபின் என்ற பொருள், புற்றுநோய் கிருமிகள் ஏற்படுவதைத் தடுப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.