தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் முன்னரே அதற்கு தீர்வு காணவேண்டும் என காவல்துறை அதிகாரிகளுக்கான மாநாட்டில் முதல்வர் வலியுறுத்தியதன் அர்த்தம் என்ன? – SDPI கேள்வி
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் முன்னரே அங்கு கலவரம் பற்றிக்கொண்டதை ஊடக செய்திகள் வெளிப்படுத்துகின்றன. இந்நிலையில், அங்கு பிலோனியா என்ற இடத்தில் நிறுவப்பட்டிருந்த லெனின் சிலையை புல்டோசர் மூலம் பாஜக குண்டர்கள் உடைத்து அகற்றினர். இந்த அராஜக செயலை பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ் வரவேற்றிருந்த நிலையில், லெனின் சிலை போன்று தமிழகத்தில் நாளை பெரியார் சிலை உடைக்கப்படும் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
கலவரமும், வன்முறையும் தான் பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் உண்மையான முகம் என்பதை பாஜகவின் தேசிய தலைவர்களின் இந்த பதிவுகள் வெளிப்படுத்துகின்றன.
தமிழகத்தின் பொது அமைதியை கெடுக்கும் வகையிலும், வன்முறை அரசியலை தூண்டும் வகையிலும் தொடர்ந்து நச்சுக்கருத்துகளை பரப்பிவரும் பாஜகவின் தேசிய செயலாளராக இருக்கக் கூடிய எச்.ராஜா, அனைவராலும் மதிக்கப்படக்கூடிய தந்தை பெரியார் குறித்து பேசினால் அது பிரச்சினைக்கு வழிவக்கும் என்பதை தெரிந்தே, திரிபுராவில் லெனின் சிலை தகர்க்கப்பட்டதை உதாரணப்படுத்தி, நாளை தமிழகத்திலும் பெரியார் சிலையை உடைக்கும் அத்தகைய சூழல் உருவாகும் என பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நச்சுக் கருத்தை தெரிவித்துள்ளார்.
‘பயங்கரவாதம், மதவாதம் ஆகியவை சமுதாயத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தல். அதன் மூலம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் முன்னரே அதற்கு தீர்வு காண வேண்டும்’ என சில தினங்களுக்கு முன்னர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கான மாநாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்த நிலையில், எச்.ராஜா போன்றவர்கள் தொடர்ந்து இதுபோன்ற வன்முறை பேச்சுகளை பேசும் போது நடவடிக்கை எடுக்காமல் அமைதி காப்பது என்ன அர்த்தம்.
திரிபுராவில் லெனின் சிலை உடைப்பை தொடர்ந்து அங்கு வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், திட்டமிட்டே தமிழகத்தின் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடந்துகொள்ளும் எச்.ராஜா மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து இதுபோன்று நடந்துகொள்ளும் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்காததன் விளைவாக இன்றைக்கு அவரின் நடவடிக்கைகள் பெரும் நச்சுப் பாம்பாக உருவெடுத்து வருகிறது. அந்த நச்சுப் பாம்பின் வளர்ச்சியை தடுக்காவிடில் அது பெரும் புற்றாகி தமிழகத்தின் அமைதியான சூழலை கெடுத்து விடும் என எச்சரிக்கையாக தெரிவித்துக்கொள்கிறேன். இதனை தமிழக அரசும், காவல்துறையும் தடுத்து நிறுத்தும் வகையில் செயலாற்றிட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.