சென்னை: அதிமுகவின் அதிகாரப்பூர்வ நமது அம்மா நாளேடு வரும் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் வெளியாகும் என கூறப்படுகிறது.
ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அவருக்கும் அதிமுகவுக்கும் ஆதரவான செய்திகளை நமது எம்ஜிஆர் நாளிதழ் வெளியிட்டு வந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவுக்கு ஆதரவாக மாறியது நமது எம்ஜிஆர் மற்றும் ஜெயா குழும தொலைக்காட்சிகள்.
இந்நிலையில் சசிகலா குடும்பத்தினருக்கு எதிராக தர்மயுத்தம் மேற்கொண்ட ஓபிஎஸ் பின்னர் ஈபிஎஸ் அணியுடன் சேர்ந்து துணை முதல்வரானார். இதைத்தொடர்ந்து ஈபிஎஸ் ஓபிஎஸ் அணிகள் சேர்ந்து சசிகலா குடும்பத்தை ஒதுக்குவதாக அறிவித்தது.
இதையடுத்து தமிழக அரசு மற்றும் அதிமுகவுக்கு எதிரான ஊடகங்களாக நமது எம்ஜிஆரும் ஜெயா குழும தொலைக்காட்சிகளும் மாறின.
இதனால் அதிமுகவின் நலத்திட்டங்கள் மற்றும் தமிழக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பின்னடைவு ஏற்பட்டது.
இந்நிலையில் அதிமுக அதிகாரப்பூர்வ நாளேடாக நமது அம்மா மற்றும அம்மா டிவி என்ற சேனல் தொடங்கப்படும் என அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து
அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா வரும் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி நமது அம்மா நாளேடு வெளியிடப்படுகிறது.