குளச்சல்: கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. குழந்தைகளை கடத்தும் கும்பல் அல்லது கொள்ளை கும்பல் இதுபோல் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி கொள்ளையடிக்க ஏற்ற வீடு என அடையாளம் காண்பதற்கு வசதியாக இவ்வாறு கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்படுவதாக தகவல் பரவி வருகிறது. இதனால் கருப்பு ஸ்டிக்கர் குமரி மாவட்டத்தில் கடும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் குளச்சல் புல்லன்விளையை சேர்ந்த ஆரிஸ் (33) என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார்.
மறுநாள் காலை வந்த போது வீட்டின் பின் பக்க ஜன்னல் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. இது குறித்து அவர் குளச்சல் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். கருப்பு ஸ்டிக்கர் குமரி மாவட்டத்தில் பெரும் பீதியை ஏற்படுத்தி வரும் நிலையில் குளச்சல் பகுதியிலும் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போல் கடந்த சில தினங்களுக்கு முன் இலப்பவிளை பகுதியிலும் ஒரு வீட்டில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது..