இந்திய இ-காமர்ஸ் துறையின் முக்கியமான நிறுவனமான பிளிப்கார்டில் மும்பையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் தேப்ராஜ் மெகபூப் நாக்ரலி ஐபோன்-8ஐ ஆர்டர் செய்து உள்ளார். ஐபோனுக்கு ரூ. 55 ஆயிரத்தையும் செலுத்தி உள்ளார். ஆனால் அவருக்கு டெலிவரி செய்யப்பட்டது ரூ. 10 மதிப்புடைய வெறும் வாஷிங் சோப் மட்டுமே. பான்வால் பகுதியை சேர்ந்த தேப்ராஜ் மெகபூப் நாக்ரலி மத்திய மும்பை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து உள்ளார். கடந்த 22-ம் தேதி வீட்டில் பிளிப்கார்ட் டெலிவரி செய்த பாக்ஸில் ஐபோனுக்கு பதிலாக சோப் டெலிவரி செய்யப்பட்டது, இதற்காக ரூ. 55 ஆயிரம் செலுத்தி உள்ளேன் என புகாரில் தெரிவித்து உள்ளார்.
பைகுல்லா போலீஸ் அதிகாரி அவினாஷ் பேசுகையில், “தேப்ராஜ் மெகபூப் நாக்ரலி புகாருடன் 31-ம் தேதி காவல் நிலையத்தை அணுகினார், நாங்கள் பிளிப்கார்ட்டிற்கு எதிராக ஏமாற்றுதல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளோம்,” என கூறிஉள்ளார். இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.