18 கேமராக்கள் இருக்கு.. ஆனால் ஏன் மோடியின் பேச்சை லைவ் செய்யவில்லை என்று கேட்டு தூர்தர்ஷன் பெண் அதிகாரியை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.
பிரதமர் மோடி கடந்த 30-ந்தேதி சென்னைக்கு வந்திருந்தார். ஐஐடியில் நடந்த பட்டமளிப்பு விழாவிலும் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.
அப்போது, “உலகில் மிகவும் பழமையான மொழி தமிழ் என்றும், தமிழர்களின் விருந்தோம்பல் பண்பு மிகவும் சிறப்பானது.. தமிழர்களின் கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவை மிகவும் சிறப்பு வாய்ந்தது” என்றெல்லாம் பெருமை பட பேசினார்.
ஆனால் பிரதமரின் இந்த பேச்சை தூர்தர்ஷனில் நேரலை செய்யவில்லை என்று புகார் எழுந்தது.
தூர்தர்ஷன் அரசு தொலைக்காட்சி ஆகும். அதனால், இதுகுறித்து நிகழ்ச்சி ஒளிபரப்பு பிரிவின் உதவி இயக்குனர் வசுமதியிடம் விசாரணை நடத்தப்பட்டது. பிரசார் பாரதி அதிகாரிகள் இந்த விசாரணையை நடத்தினர்.
அப்போது மோடியின் நிகழ்ச்சிகளை 18 கேமிராக்கள் மூலம் ரெக்கார்ட் செய்யப்பட்டு, அதன்பிறகுதான் தூர்தர்ஷனில் டெலிகாஸ்ட் செய்தது தெரிய வந்தது. அதாவது பிரதமரின் பேச்சை லைவ் செய்யவில்லை. இது சம்பந்தமான உரிய பதிலையும் சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், உதவி இயக்குனர் வசுமதியை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்தனர்.
இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், வசுமதி சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் தங்கி இருக்கும்படியும், வெளியே செல்ல அவசியம் ஏற்பட்டால் முறையான அனுமதி பெற்று செல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரதமரின் பேச்சை லைவ் செய்யாததற்காக அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.