அதிரை மெயின் ரோட்டிலிருந்து கடைத்தெரு செல்லும் பிரதான சாலையில் மழைநீர் ஆங்காங்கே குட்டை போல் தேங்கிக்கிடக்கிறது. தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இச்சாலை வழியாக சென்று வருகின்றன.
வணிக நிறுவனங்கள், மருந்து கடைகள் என அத்தியாவசிய நிறுவனங்கள் பல இச்சாலையில் அமைந்துள்ளன. அதுமட்டுமின்றி அதிரை பேருந்து நிலையத்திற்கு செல்லும் முக்கிய சாலையாகவும் இது இருக்கிறது.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலை வாகனங்கள் இயக்குவதற்கு துளியும் தகுதி இல்லாததாக இருக்கிறது. ஏனெனில் சாலை முழுவதும் ஆங்காங்கே பள்ளம் விழுந்து காணப்படுகிறது. அதுமட்டுமின்றி அப்பள்ளங்களில் மழைநீர் தேங்கி பலநாட்களாக அப்படியே கிடக்கிறது. இதனால் தொற்று நோய் மற்றும் டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே அதிரை பேரூராட்சி நிர்வாகம் இச்சாலையில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தி முறையான வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.