புல்வாமாவில் தீவிரவாதத் தாக்குதலால் கொல்லப்பட்ட 40 சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்தினரின் நலனுக்காக ரூ.5 லட்சம் நிதியை இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி வழங்கியுள்ளார்.
புல்வாமா ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பின் இந்தக் கொடூர செயலுக்கு நாடுமுழுவதும் கண்டனம் எழுந்துள்ளது. கிரிக்கெட் வீரர்கள் விராட்கோலி, கவுதம் கம்பிர், வீரேந்திர சேவாக், முகமது கைப், ஷிகர் தவண் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நிவாரண உதவிகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தி சேவாக், வீர மரணம் அடைந்த 40 வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவையும் ஏற்பதாக ட்விட்டரில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்தியஅணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களின் மனைவிகளுக்கு உதவும் நல அமைப்புக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்தார்.
அப்போது நிருபரிடம் முகமது ஷமி பேசுகையில், ” நாங்கள் இந்திய அணிக்காக விளையாடும்போது, வீரர்கள் எல்லையில்நின்று குடும்பத்தை பாதுகாக்கிறார்கள். அவர்கள் இப்போது இந்த உலகில் இல்லாதநிலையில் அவர்களின் குடும்பத்துக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.நாம் எப்போதும், வீரர்களுக்கு ஆதரவாக இருப்போம்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே இந்திய அணி வீரர் ஷிகர் தவண் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்ட வீடியோவில், புல்வாமா தாக்குதலில் பலியான 40 வீரர்களின் குடும்பத்தினருக்கு அனைவரும் நிதியுதவி அளிக்க வேண்டும் ” எனக் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குத்துச்சண்டை வீரர் விஜயேந்தர் சிங் ஹரியானா போலீஸில் பணியாற்றி வருகிறார். அவர் தனது ஒருமாத ஊதியத்தை வீரர்களின் குடும்பத்தின் நலனுக்காக வழங்குவதாகஅறிவித்துள்ளார். மேலும், பிசிசிஐ செயல் தலைவர் சி.கே கண்ணா, உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் வினோத் ராய்க்கு விடுத்துள்ள கோரிக்கையில், பலியான வீர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 கோடி வழங்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது…