தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் அரசின் மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் மல்லிப்பட்டினத்தை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல நூறு மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் அப்பளியில் உள்ள விளக்குகளை சமூக விரோதிகள் அடித்து உடைத்துள்ளனர். பள்ளியில் உள்ள 12 விளக்குகளை உடைத்து மட்டுமின்றி, அங்குள்ள கழிப்பறைகளை சேதப்படுத்தியும், ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும் உள்ளனர்.
தற்போது பள்ளி நிர்வாகத்தினர் உடைக்கப்பட்ட விளக்குகளுக்கு பதிலாக, கடையில் வாடகைக்கு விளக்குகளை எடுத்து எரியவிட்டுள்ளனர். இந்த வாடகையினால் தேவையற்ற செலவு ஏற்படுவதாகவும் பள்ளி நிர்வாகத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.
பள்ளிக்கூடம் என்றும் பாராமல், இவ்வாறு அடித்து உடைக்கும் ஒரு சில ஈனப் பிறவிகளின் இச்செயல் கடும் கண்டனத்துக்குரியது. மேலும் காவல்துறையினர் இதுகுறித்து விசாரித்து இச்செயலில் ஈடுபட்டு வரும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், கல்வியாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.