மகளே..ஆசிபா..
குழந்தைகள் கூட
வாழத் தகுதியற்ற
மண்ணாகி போனது இந்நாடு..
உலகமே உமிழ்ந்து
அறிவிக்கிறது..
இது நாடல்ல..
நரிக் கூட்டம்
காவு வாங்கும் இடுகாடு..
….
கொலைகார வல்லூறுகளின்
வன் பசிக்கு இரை என ஆனாய்.
எதனாலும் மறக்க முடியா
கடும் துயரமாய் போனாய்..
..
காற்றில் அலையும்
பேய்களின் நாவுகள்
உலவும் காடு..
இது குருதி குடிக்கும்
வெறி நாய்கள்
ஆளும் நாடு..
இங்கே மாந்தராய்
பிறப்பதே மனிதருக்கு
கேடு..
…
சாத்தான்களின் தேசத்தில்
தேவதைகளுக்கு எந்த
இடமுமில்லை..
இந்த ஓநாய்கள்
மனிதராய்
பிறந்ததற்கு பூவுலகில்
எந்த தடமுமில்லை..
…
தீ பிடித்து எரியுதே
உன் தாயின் கருவறை..
கடவுளின் வசிப்பிடம்
கூட உனக்கு ஆனது கல்லறை..
….
மதவெறி மனிதரை
மாய்த்து கேட்குது
உயிரின் கப்பம்..
கண் மூட விழிகளில்
தேங்குது
கண்ணீரின் வெப்பம்..
இனியும் விட்டால்
இவர்கள்
இரத்த ஆற்றில்
விடுவார்கள்.. பிணங்களின்
தெப்பம்..
…
உன் நிலை பார்த்து
அந்த காஷ்மீரத்து
பனிமலையும்
பரிதவிக்கும்..
இக் கொடுமை தீர
அம் மண்ணே
இனி தொடர்ச்சியாய்
வீரத்தை பிரசவிக்கும்..
..
எம் மகள் நிலை கண்டு
தமிழ் மண்ணில் இருந்து
சிந்துகிறது எம் கண்ணீர்..
இனியேனும் அந்த
பனி மண்ணில்
மானுடம் தெளிக்கட்டும்
நேயத்தின் பன்னீர்..
-கண்ணீர் விழிகளோடும்,
தீரா கோவத்தோடும்..
சீமான்.