பெங்களூர் எலஹங்கா பகுதியில், சர்வதேச விமான கண்காட்சி இன்றுடன் 4வது நாளாக நடைபெற்று வருகிறது. பல நாடுகளை சேர்ந்த முன்னணி விமானங்கள் இங்கே காட்சிப்படுத்தப்படுகின்றன. சாகசங்கள் செய்கின்றன. இதில் ரபேல் போர் விமானமும் கூட சாகசங்கள் செய்து காட்டியிருந்தது.
இந்த கண்காட்சியை நேரில் பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருவது வழக்கம். வெளிநாட்டினரும் வந்துள்ளனர். இன்றும் அவ்வாறு மக்கள் வருகை தந்திருந்தனர்.
விமான கண்காட்சி நடைபெறும் இடத்திற்கு, வெளியே கேட் எண் 5 அருகே, நூற்றுக்கணக்கான கார்கள் நிறுத்தி வைக்க இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று மதியம் திடீரென வாகன நிறுத்தம் உள்ள இடத்தில், புல்வெளியில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ மளமளவென பரவியது. இதனால் சுமார் 300க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
காய்ந்த புல்களை அகற்றாமல் விட்டிருந்ததுதான், இந்த தீ விபத்துக்கு முக்கிய காரணம். சுமார் 400 ஏக்கரில் இந்த புல்வெளி இருந்துள்ளது. அதை முதலில் அகற்றியிருக்க வேண்டும். அல்லது புல்வெளியில் தண்ணீர் தெளிக்க வேண்டும். ஆனால் அதை செய்யவில்லை. இதுதான் தீ விபத்துக்கு முக்கிய காரணம்.
தீ விபத்தால் அந்த பகுதி முழுக்க கரும் புகை மூட்டமாக காட்சியளித்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பீதி நிலவியது. இந்த விபத்துக்கு சதி வேலை ஏதேனும் காரணமா என்பது குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.
வீடியோ :