கடந்த மாதம் 15ஆம் தேதி தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் ருத்ரதாண்டவம் ஆடியது. இதனால் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளும், மறுசீரமைப்பு பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. புயலால் பல்வேறு ஊர்களில் பல்லாயிரக்கணக்கான மின்கம்பம் சேதமடைந்து முறிந்து விழுந்துள்ளன. அதனை சீர்செய்யும் பணியில் தமிழக மின்வாரிய ஊழியர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை உள்ளூர் மக்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பணங்குளம் என்ற இடத்தில் புயலால் சேதமடைந்த மின்கம்பங்களுக்கு பதில் புதிய மின்கம்பம் அமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென அப்பகுதியில் மழை கொட்ட தொடங்கியுள்ளது. இருந்தும் அங்கு மின்கம்பத்தில் ஏறி மின்கம்பிகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் தங்கள் பணியை நிறுத்தவில்லை. கொட்டும் மழையில் குடை பிடித்துக்கொண்டு மின்கம்பிகளை சரிசெய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அந்த ஊழியர்களை வெகுவாக பாராட்டினர்.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்துக்கொண்டு தங்கள் பணியை தொடர்ந்த அந்த மின்வாரிய ஊழியர்கள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்களே !