வங்கக்கடலில் உருவான ஃபனி புயல், தமிழகம் ஆந்திரா என போக்கு காட்டி கடைசியில் கடந்த வெள்ளிக்கிழமை ஒடிசா மாநிலத்தை தாக்கியது. இதில், பூரி, கோபால்பூர் உள்ளிட்ட பல பகுதிகள் சேதமடைந்தன.
மணிக்கு 245 கிலோ மீட்டர் வேகத்தில் சுழன்றியடித்த காற்றால் ஏராளமான மரங்களும் மின்கம்பங்களும் சாய்ந்துள்ளன. புயலால் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
ஃபனி ஆடிச்சென்ற பேயாட்டத்தில் இருந்து இன்னும் அம்மாநிலத்தின் பல பகுதிகள் இயல்புநிலைக்கு திரும்பவில்லை. புயல் பாதித்த ஒடிசாவில் மீட்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் மாநில முதல்வர் நவீன்பட்நாயக் தனது ஒரு ஆண்டு சம்பளத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கிட முடிவு செய்துள்ளார். ஒடிசாவில் சர்வதேச அளவிலான பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்ததாகவும், சர்வதேச தரத்திலான சீரமைப்பு பணிகள் நடக்கவுள்ளதாகவும் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
புயலால் பாதிப்படைந்த மாநிலத்திற்கு, தனது ஒரு வருட சம்பளத்தை முதல்வர் நவீன் பட்நாயக் அளித்துள்ளது பாராட்டத்தக்கது.