பிளஸ் 2 கணக்குத் தேர்வில் இடம் பெற்ற கேள்வித்தாள் கடினமாக இருந்ததால் தேர்வு அறையில் மாணவியர் கண்ணீர் விட்டனர். அவர்களை அதிகாரிகள் தேற்றி தேர்வு எழுத வைத்தனர்.
பிளஸ் 2 வகுப்பு தேர்வு கடந்த 1ம் தேதி தொடங்கியது. தமிழ், ஆங்கில மொழிப் பாடங்கள் முடிந்த நிலையில் 5 நாட்கள் விடுமுறைக்கு பிறகு நேற்று கணக்கு, விலங்கியல், நுண்ணுயிரியல், சத்துணவு ஆகிய பாடங்களுக்கான தேர்வு நடந்தது. இந்த தேர்வில் அறிவியல் பாடத் தொகுதியில் 5 லட்சத்து 47 ஆயிரம் மாணவ மாணவியர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் கணக்குப் பாடத்தை முக்கிய பாடமாக எடுத்துள்ளனர். நேற்றைய கணக்குப் பாடத் தேர்வில் வழங்கப்பட்ட கேள்வித்தாளை படித்துப் பார்த்த மாணவியர் 6 மதிப்பெண் கேள்விகளை படித்ததும் அதிர்ச்சி அடைந்து கண்ணீர் விட்டனர். பல மாணவியர் தேர்வு எழுதாமல் அழுதனர்.
அதைப்பார்த்த அறை கண்காணிப்பாளர்கள் மாணவியரை அழ வேண்டாம் என்று தேற்றினர். நீண்ட நேரத்துக்கு பிறகு மாணவியர் தேர்வு எழுதியுள்ளனர். இந்த சம்பவம் எல்லா மாவட்டத்திலும் நடந்ததாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். பிளஸ் 2 தேர்வைப் பொறுத்தவரையில் எந்த மாற்றமும் இல்லாமல் கடந்த ஆண்டைப் போலவே கேள்விகள் இடம் பெறும் என்றும், புளூபிரிண்ட் படிதான் இருக்கும் என்றும் தேர்வுத்துறை அறிவித்து இருந்தது.
ஆனால் நேற்றைய கணக்குத் தேர்வில் இடம் பெற்ற 40 ஒரு மதிப்பெண் கேள்விகள் அனைத்தும் அரசு அச்சிட்டு வெளியிட்ட வினா வங்கி மற்றும் தீர்வுப் புத்தகத்தில் இருப்பது போல அல்லாமல் விடைகள் அனைத்தும் வரிசை மாற்றி கேட்கப்பட்டதால் விடையை தேர்வு செய்வதில் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். 6 மதிப்பெண் கேள்விகள் 10 எழுத வேண்டும். அந்த கேள்விகள் புளூ பிரிண்ட்படி கேட்கப்படவில்லை.
குறிப்பாக 48 வது கேள்வி, பாடப்புத்தகத்தில் இல்லாமல் பாடப்புத்தகத்துக்கு வெளியில் இருந்து கேட்கப்பட்டு இருந்தது. சூத்திரம் தெரிந்திருந்தால் மட்டுமே அந்த கேள்விக்கு பதில் எழுத முடியும். 10ம் மதிப்பெண் கேள்விகள் 10 எழுத வேண்டும் மொத்த மதிப்பெண் 100. புளூ பிரிண்ட் படி அனலட்டிகல் பகுதியில் இருந்து 4 கேள்விகள் இடம் பெற வேண்டும். ஆனால் இரண்டு கேள்விகள் தான் கேட்கப்பட்டுள்ளன. அதில் ஒரு கேள்வி பாடத்தில் இல்லாத கேள்வி. இப்படி மாற்றி கேட்பதற்கு எதற்கு புளூ பிரிண்ட். இருப்பினும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கணக்கு தேர்வு சற்று எளிதாக இருந்தது. 6 மதிப்பெண் கேள்விகள் கடினமாக இருந்ததால் சென்டம் எடுப்பது கடினம்.
பிட் அடித்த 23 பேர் சிக்கினர்: பிளஸ் 2 தேர்வு நடப்பதை அடுத்து நேற்று கணக்கு, விலங்கியல், நுண்ணுயிரியல், சத்துணவு ஆகிய பாடத் தேர்வுகள் நடந்தது. தேர்வில் முறைகேடுகள் நடப்பதை தடுக்க அமைக்கப்பட்ட பறக்கும் படையினர், அண்ணா பல்கலைக் கழக சிறப்பு கண்காணிப்பு குழுவினர் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பிட் அடித்ததாக 23 பேர் சிக்கினர். ்அவர்களில் கணக்குப் பாடத்தில் சேலம் 1, திருச்சி 7, விழுப்புரம் 10 பேரும், விலங்கியல் பாடத்தில் விழுப்புரம் 5 பேர் அடங்குவர். அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பறக்கும் படையினர் தேர்வுத்துறைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.