பிரிட்டன் நாட்டின் தூதரை ஈரான் அரசு திடீரென கைது செய்ததால் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க- ஈரான் இடையிலான போர் பதற்றத்தின் மத்தியில், டெஹ்ரானில் இருந்து 176 பேருடன் கிளம்பிய உக்ரைன் விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது. இதில் விமானத்தில் இருந்த அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மனித தவறின் காரணமாகவே உக்ரைன் விமானம் சுடப்பட்டது என்று ஈரான் ஒப்புக்கொண்டது. விமானத்தை ஈரான் ராணுவம் சுட்டுவீழ்த்தியதை கண்டித்து ஈரானில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
உயர்மட்ட தலைவர் அயத்துல்லா காமேனி பதவி விலக வலியுறுத்தி இளைஞர்கள், மாணவர்கள் பலர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே அமிர் கபிர் பல்கலைக்கழகம் அருகே பிரிட்டன் தூதர் ராப் மெக்கைரை ஈரான் பாதுகாப்புப் படையினர் சில மணிநேரம் தடுப்புக் காவலில் வைத்திருந்து பின்னர் விடுவித்தது தெரியவந்துள்ளது.
போராட்டத்தை தூண்டிய குற்றச்சாட்டில் அவரை ஈரான் அரசு தடுப்புக்காவலில் வைத்தது. இது சர்வதேச விதிகளை மீறிய செயல் என பிரிட்டன் கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரான் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என அமெரிக்காவும் வலியுறுத்தியுள்ளது.