ராமேஸ்வரம் அருகே பாம்பன் சாலை பாலத்தில் 60 லட்சம் ரூபாயில் புதிய மின் விளக்கு பொருத்தப்பட்டது.
பாம்பன் கடல் மீது அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் மூன்றாண்டகளுக்கு முன்பு 18.56 கோடி ரூபாயில் மராமத்து செய்து பாலத்தின் இருபுறமும் 420 மின்விளக்குகள் பொருத்தினர். தரமற்ற பணியால் இரண்டு ஆண்டகளுக்கு முன்பு மின்விளக்குகள் பழுதாகி, பாலம் இருளில் மூழ்கியது.
இந்நிலையில் பாலத்தின் தென்பகுதியில் 60 லட்சத்தில் புதியதாக 70 மின் விளக்குகள் பொருத்தும் பணி இரண்டு மாதங்களுக்கு முன்பு துவங்கியது. ஏற்கனவே பழுதான மின்கம்பங்களை அகற்றி புதிய மின் விளக்குகள் பொருத்தும் பணி 100 சதவீதம் முடிவடைந்த நிலையில், ஓரிரு நாட்களில் மின் இணைப்பு கொடுத்ததும் 70 புதிய மின் விளக்குகள் ஜொலிக்கும் என பொறியாளர்கள் தெரிவித்தனர்.