திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். திமுக சார்பில் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் பொதுச்செயலாளர் க.அன்பழகன். அதேபோல திமுகவின் பொருளாளராக துரைமுருகன் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டதாக க.அன்பழகன் அறிவித்தார்.
திமுக தலைவர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெறும் என அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்திருந்தது. அதன்படி தற்போது செயல் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின், தலைவர் பதவிக்கு போட்டியிட ஞாயிற்றுக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அக்கட்சியின் 65 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிந்திருந்த வேட்புமனுவை, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் மு.க.ஸ்டாலின் அளித்தார்.
பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்புமனு தாக்கல் செய்தார். மனுத்தாக்கலுக்கான அவகாசம் ஞாயிற்றுக்கிழமையோடு முடிந்துவிட்ட நிலையில், தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினையும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனையும் தவிர வேறுயாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால் அவர்கள் இருவரும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.