கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் பதக்கம் வென்ற தமிழக வீரர் கோமதி மாரிமுத்துவை வரவேற்க தமிழக அரசு சார்பில் அமைச்சர்களோ, அதிகாரிகளோ வரவேற்பு அளிக்கவில்லை என்ற சம்பவம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவிற்காக ஓடிய தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து முதலாவதாக வந்து தங்கப் பதக்கம் வென்றார்.
திருச்சி அருகே உள்ள முடிகண்டம் பகுதியைச் சேர்ந்த மிகவும் ஏழை குடும்பத்தில் பிறந்தவர் கோமதி. பொருளாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் சரிவரை கிடைக்காத மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது இவரது கிராமம். இத்தகைய ஏழ்மையான நிலையிலிருந்து வந்து தங்கப் பதக்கம் வென்ற கோமதிக்கு பல்வேறு தரப்பினரும், பெரும் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
கத்தாரிலேயே கோமதிக்கு உலகத் தமிழர்கள் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தனர். கோமதி, நேற்று தாயகம் திரும்பினார். சென்னை விமானநிலையம் வந்தடைந்த அவரை வரவேற்க தமிழக அரசின் சார்பில் அதிகாரிகள் யாரும் செல்லவில்லை.விளையாட்டுத்துறை ஆணையம் தரப்பிலும் எந்த அதிகாரிகளும் விமானநிலையத்துக்கு வரவில்லை. இது விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நாடு திரும்பிய கோமதிக்கு சென்னையைச் சேர்ந்த தனியார் பள்ளி சார்பில் பாராட்டுவிழா நடத்தப்பட்டு, 3 லட்ச ரூபாய் பரிசுத் தொகை அளிக்கப்பட்டுள்ளது.