அதிரையில் கடந்த ஜனவரி மாதம் ரயில்வே நிலைய பணிகள் முடிக்கப்பட்டு மே மாதம் திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை வழியாக காரைக்குடி வரை செல்லும் பயணிகள் டெமோ ரயிலை ரயில்வே சங்கம் இயக்கியது. பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு உண்டான சோதனை ஓட்டமாக இவ்வழித்தடத்தில் டெமோ ரயில் மூன்று மாத காலத்திற்கு இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
டெமோ பயணிகள் ரயில் மூன்று மாத காலமாக திருவாரூரில் இருந்து காரைக்குடி வரை சென்று வரும் நிலையில், சென்னை வரை செல்லும் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயிலை இவ்வழித்தடத்தில் இயக்க வேண்டும் என அதிரையர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கைகள் வைத்த வண்ணம் உள்ளனர்.
முன்னதாக இன்று CMP வாய்க்கால் மற்றும் அதிரை நீர்நிலைகளை பார்வையிட வந்த தஞ்சை திமுக பாராளுமன்ற உறுப்பினர் SS.பழனிமாணிக்கம் அவர்களிடம், அதிரை நல்வாழ்வு பேரவையின் தலைவர் அஹமது ஜாஃபர் அவர்கள் ரயில்வே சம்பந்தமான மனு ஒன்றை அளித்தார். அதில் சென்னை வரை செல்லும் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயிலை இவ்வழித்தடத்தில் இயக்க வேண்டும் எனவும், இவ்வழித்தடத்தில் கேட்பாரற்றுக் கிடக்கும் கிடக்கும் ரயில்வே கேட்களுக்கு நிரந்தரமான கேட் கீப்பர்களை துரிதமாக நியமிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் SS.பழனிமாணிக்கம், விரைந்து நடவடிக்கை எடுப்பதற்கான முழு முயற்சிகளையும் செய்து தருவதாக உறுதி கூறினார். இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள்,தொண்டர்கள் சமூக ஆர்வலர்கள் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது.