ஐ.நா-வின் காலநிலை மாறுபாடு குறித்து ஆய்வு செய்த ஐ.பி.சி.சி (Intergovernmental Panel on Climate Change -IPCC), அதிர்ச்சிகரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இந்த நூற்றாண்டின் இறுதியில் இமயமலை வேகமாக உருகி, கடல் நீர் மட்டம் வேகமாக அதிகரிக்கும். இதனால் சென்னை, கொல்கத்தா, மும்பை மற்றும் சூரத் ஆகிய நான்கு கடலோர நகரங்கள் மிக மோசமாகக் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என்று அந்த ஆய்வறிக்கை சொல்கிறது. அதே சமயம் வட இந்தியாவின் பல பகுதிகள் மிகக் கடுமையான தண்ணீர்ப் பஞ்சத்தை எதிர்கொள்ளும் என்கிற தகவலையும் அந்த அறிக்கை தெரியப்படுத்துகிறது.
பனிப்பாறைகள், பனிமலைகள் உருகி கடல் நீர் மட்டம் நீண்ட காலமாக அதிகரித்து வந்தாலும், இதற்கு முன் இருந்ததை விடக் கடல் மட்டம் வேகமாக அதிகரித்து வருவதாக இந்த ஆய்வறிக்கை எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறது.
இதனால் 2100-ம் ஆண்டில் உலக அளவில் 1.4 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள். இந்திய அளவில் 4 கடற்கரை நகரங்கள் மட்டுமன்றி உலக அளவில் 45 துறைமுக நகரங்கள், 50 செ.மீ., வரை கடல்மட்டம் உயர்ந்து, வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் இந்த அபாய நிலை அதிகரித்து வருவதால் தாழ்வான கடற்கரையோர நகரங்கள், சிறிய தீவுகள் மோசமான அபாய நிலையில் உள்ளன.
மேலும் உலக வெப்ப மயமாதலைக் குறைக்க அவசர நடவடிக்கை எடுக்காவிட்டால் கடலின் வெப்பம் அதிகரித்து கடல் வாழ் உயிரினங்கள் அழியும் நிலை ஏற்படும். உலக அளவில் கடல் உணவுகள் இல்லாமல் போகும். அதிக அளவில் புயல் சின்னங்கள் உருவாகவும் வாய்ப்புள்ளது. 1982-ம் ஆண்டு முதல் 2016 வரை கடலின் வெப்பநிலை இருமடங்கு அதிகரித்துள்ளது. இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 30-60 செ.மீட்டர் வரை கடல் மட்டம் உயரும் என்பதைத் தெள்ளத்தெளிவாக விளக்கியிருக்கிறது இந்த அறிக்கை.