சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிராக போராடும் பாஜக முத்தலாக்கில் மட்டும் பெண்களுக்கு ஆதரவாக பேசுவது ஏன் என்று லோக் சபாவில் இன்று எதிர்க்கட்சிகள் வாதம் செய்துள்ளது.
முத்தலாக் முறைக்கு எதிரான மசோதா மீது இன்று லோக் சபாவில் விவாதம் நடந்தது. கடும் அமளிக்கும் இடையில் இந்த மசோதா மீது விவாதம் நடந்தது.
லோக் சபாவில் அமளி நிலவுவதால் மசோதா முறையாக தாக்கல் செய்யப்படுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த மசோதாவிற்கு எதிரான நிலைப்பாட்டை காங்கிரஸ் எடுத்து இருந்தது. காங்கிரஸ் எம்.பிக்கள் மசோதாவிற்கு எதிராக பேசினார்கள். அதேபோல் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்த மசோதாவை தேர்வு கமிட்டிக்கு அனுப்பி சோதனை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
மசோதாவிற்கு எதிராக பேசிய காங்கிரஸ் எம்.பி சுஸ்மிதா தேவ் ”இந்த சட்டத்தில் பல விஷயங்கள் தெளிவாக இல்லை. கைது எப்போது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய விஷயங்களை இதில் தெளிவாக குறிப்பிடவில்லை. முக்கியமாக இது இஸ்லாமிய பெண்களை காப்பதற்காக கொண்டு வரப்படவில்லை. மாறாக இஸ்லாமிய ஆண்களை கைது செய்ய வேண்டும் என்று கொண்டு வரப்பட்டுள்ளது” என்று கூறினார்.
இந்த நிலையில் இதற்கு பதில் அளித்த சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ”இது முழுக்க முழுக்க பெண்களின் சுதந்திரத்திற்காக மட்டும்தான். பெண்களுக்கும் சம உரிமை பெற வேண்டும் என்பதற்காகத்தான் கொண்டு வரப்பட்டது. இது எந்த மதத்திற்கும் எதிரானது கிடையாது” என்று கூறினார்.
இதற்கு பதில் அளித்த எதிர்க்கட்சிகள் சபரிமலையில் பெண்கள் நுழைய பாஜகவினர் அனுமதி அளிக்கவில்லை. அப்போது மட்டும் பெண்கள் உரிமை, பெண்கள் சுதந்திரம் என்ன ஆனது. இதுதான் பாஜகவின் நடுநிலையான என்று வாதம் செய்தனர். இதையடுத்து லோக் சபாவில் இருதரப்பினரும் எழுந்து பெரிய அளவில் வாதம் செய்தனர். இதனால் லோக் சபாவில் பெரிய அமளி நிலவியது.