குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பெங்களூரில் 101 வயதிலும் சுதந்திர போராட்ட தியாகி ஒருவர் 5 நாட்கள் போராட்டம் நடத்தி வருகிறார்.
நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் வலுக்கிறது. இதில் டெல்லி மையப்புள்ளியாக அமைந்துள்ளது. இது அரசியலமைப்புக்கு எதிரானது என போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
இது மனித, சமூக, பொருளாதார, அரசியல் உரிமைகளுக்கு எதிரானது என்பதாலும் டெல்லி, தமிழகம், பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த நிலையில் பெங்களூரைச் சேர்ந்தவர் எச். எஸ். துரைசாமி. இவருக்கு 101 வயதாகிறது.
இவர் ஒரு சுதந்திர போராட்டத் தியாகியாவார். வெள்ளையர்களை நாட்டை விட்டு விரட்டிய துரைசாமி இந்த சட்டத்தையும் விரட்டும் பொருட்டு 5 நாட்கள் போராட்டம் நடத்த அனுமதி கோரினார். அதாவது பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை போராட்டம் நடத்த அனுமதி கோரிய நிலையில் அதற்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். எனினும் துரைசாமி கடந்த 6ஆம் தேதி போராட்ட களத்திற்கு வந்தார்.
அங்கு நாள் முழுவதும் உட்கார்ந்திருந்தார். பின்னர் சிலர் போராட்டக்காரர்களுக்கு பந்தல் போட முன்வந்தனர். அதில் தள்ளாத வயதிலும் சமூக அக்கறையுடன் போராட வந்த துரைசாமிக்கு பந்தல் போட ஒரு குழுவினர் விரும்பினர். எனினும் அங்கு போராட்டம் நடத்தியவர்களை 15 நிமிடங்கள் போலீஸார் பிடித்து வைத்திருந்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். எனினும் ஷாமியானா பந்தல் போட அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து துரைசாமியும் போராட்டக்காரர்களும் வெயிலில் அமர்ந்தனர். ஆனால் இவர்களுக்கு பாதுகாப்புக்கு வந்த போலீஸாரோ வெயிலிலிருந்து தப்பிக்க பந்தல் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தனர். அன்றைய தினம் 30 டிகிரி வெப்பநிலை இருந்தது. துரைசாமி இந்த போராட்டக் களத்திற்கு வருவதற்கு முன்னர் உடல்நிலை பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பிப்.7 ஆம் தேதி ஷாமியானா பந்தல் போட்டுக் கொள்ள போலீஸார் அனுமதி அளித்தனர். நமது சுதந்திரத்தை பறித்து கொள்ள வேண்டும், தொடர்ந்து போராட வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
அந்த போராட்டக் களத்தில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், நாங்கள் வேலை வெட்டி இல்லாததால் இங்கு அமர்ந்திருப்பதாக கூறுகின்றனர். இதை சொல்பவர்கள்தானே இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும். எங்களால் தொழில் செய்யகூட முடியவில்லை. ஏனெனில் மோடி இந்த நாட்டை பிரித்து விட்டார். அரசு சொத்துகளை விற்கும் சொந்த தொழிலாக நாட்டை மாற்றிவிட்டார் என குற்றம்சாட்டினர்.