Friday, March 29, 2024

கானல் நீராகும் காவிரிப் போராட்டம்…! பிரச்னைக்கு முழு அடைப்பு தீர்வாகுமா….?

Share post:

Date:

- Advertisement -

“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு… நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு” என்ற பாடல் வரிகள் ஏனோ காவிரிப் பிரச்னையில் தமிழகத்திற்கு கைகொடுக்காமல் உள்ளது.

காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் ஆட்சியில் உள்ள அ.தி.மு.க. உள்பட எல்லாக் கட்சிகளுமே, மத்திய அரசுக்கான தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன. ஆளும் அ.தி.மு.க. மாநிலம் முழுவதும் உண்ணாவிரதம் என்ற பெயரில் ஒரு போராட்டத்தை நடத்தி முடித்துள்ளது.

பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.-வும் ரயில் மறியல், ஆர்ப்பாட்டம் என தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. இதர எல்லாக் கட்சிகளுமே காவிரிக்காகக் குரல் கொடுத்துள்ளன. அதன் நீட்சியாக, மாநிலம் தழுவிய அளவில் ஒருநாள் அடையாள ‘பந்த்’-க்கும் அழைப்பு விடுத்துள்ளது. தி.மு.க அறிவித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆளும் அ.தி.மு.க. தவிர, மாநிலத்தில் உள்ள ஏறக்குறைய அனைத்துக் கட்சிகளுமே ஆதரவு தெரிவித்துள்ளன.

 
 

காவிரிப் பிரச்னையில் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற ஒருமித்த குரல் தமிழ்நாடு முழுவதிலும் ஒலித்தபோதிலும், ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றாலும், அவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்படாமல், துண்டு துண்டாகவே நடைபெற்று வருகின்றன. ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் நடைபெற்ற தன்னெழுச்சிப் போராட்டமாக காவிரிப் போராட்டம் தமிழகத்தில் உருவாகாமல் போயிருப்பது வேதனைக்குரியதே.

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே மத்திய அரசுக்கு எதிராக ஒன்று திரண்ட போதிலும், தனித்தனியாக ஒவ்வொரு கட்சியும் நடத்திவரும் போராட்டம், காவிரி விவகாரத்தில் தமிழகக் கட்சிகள் ஒரே நேர்கோட்டில் நிற்கவில்லை என்பதை படம்பிடித்துக் காட்டுவதாகவே உள்ளது. கர்நாடக மாநிலத்தைப் பொறுத்தவரை, அங்குள்ள கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஒரே குறிக்கோள், “தமிழகத்திற்கு தண்ணீர் விடக்கூடாது; உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றக்கூடாது” என்பதுதான். இந்த விஷயத்தில், அங்கு ஆளும் காங்கிரஸ், பி.ஜே.பி, மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட எல்லாக்கட்சிகளும் தங்களுக்குள் கட்சி வேறுபாடின்றி ஒரே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன.

 
 

ஆனால், தமிழகத்தில் ஏனோ அதுபோன்ற ஒற்றுமை காவிரி விவகாரத்தில் இல்லை என்றே கூற வேண்டும். உண்மை கசக்கும் என்றாலும், அதை உரக்கச் சொல்லியே ஆக வேண்டும். காவிரி விவகாரத்தில், இங்குள்ள கட்சிகள், பரஸ்பரம் மற்ற கட்சிகளின் செயல்பாட்டைக் குறைகூறிக் கொண்டும், முந்தைய மத்திய அரசைக் குற்றம்சாட்டிக் கொண்டும் உள்ளனவே தவிர, ஆக்கப்பூர்வமான எதிர்கால செயல்பாடுகளைப் பற்றி, ஆளும் அரசோ அல்லது எதிர்க்கட்சிகளோ சிந்திக்கவே இல்லை என்பதுதான் நிதர்சனமாக உண்மை.

தனித்தனியாக தங்களின் பலத்தைக் காட்ட வேண்டும் என்ற எண்ணமே இங்குள்ள கட்சிகளிடத்திலும், அதன் தலைமையிடத்திலும் மேலோங்கி இருக்கிறதே தவிர, விவசாயிகளின் நிலையில் இருந்த எந்தக் கட்சியும் காவிரிப் பிரச்னையை அணுகியதாகத் தெரியவில்லை. எங்கே மற்றக் கட்சிகளுக்கு காவிரிப் பிரச்னையில் ஆதாயம் கிடைத்துவிடப் போகிறது என்பதில் எல்லாக் கட்சிகளுமே தெளிவாக உள்ளன. புதிதாக முளைத்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் இதில் விதிவிலக்கல்ல.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தாமதம் ஏற்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தாத மத்திய அரசைக் கண்டித்தும் இங்குள்ள கட்சிகள் அனைத்தும் தனித்தனியாக போராடிக் கொண்டிருப்பது ஒருபுறம் இருக்கட்டும். கர்நாடக மாநிலத்தைப் பொறுத்தவரை, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான ஓரிரு நாள்களிலேயே ” ‘ஸ்கீம்’ என்பதற்கு மேலாண்மை வாரியம் என்று அர்த்தமல்ல; காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கக்கூடாது” என்று போர்க்கொடி உயர்த்தியது. மேலும் கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ், பி.ஜே.பி. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் ‘தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது’ என்ற ஒற்றை வரியில் நூல் பிடித்தவாறு நிற்கின்றனர்.

 
 

காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு ஒவ்வொருமுறை உச்ச நீதிமன்றம் உத்தரவிடும்போதும், அதனை செயல்படுத்தாமல் காலம் தாழ்த்துவதும், இழுத்தடிப்பதும் கர்நாடக மாநிலத்திற்கு ஒன்றும் புதிதல்லவே. ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை’ என்று கூறுவார்கள். இதை மெய்ப்பிக்கும் வகையில், கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பில் தமிழகத்திற்கு 197.25 டி.எம்.சி. தண்ணீராகக் குறைக்கப்பட்டது. இந்த அளவையும் கண்காணிக்க மேலாண்மை வாரியம் அமைப்பதற்குத்தான் இப்போது பிரச்னையே.

இதற்கிடையே தமிழக அரசு வழக்கறிஞர் உமாபதி, வழக்கு ஒன்று தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பு ஆஜரானார். அப்போது தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் குறித்து தலைமை நீதிபதி கேட்டறிந்தார். “தமிழகத்தில் என்னதான் நடக்கிறது? ஏன் அனைத்து இடங்களிலும் போராட்டம் நடக்கிறது? மக்களும் தமிழகக் கட்சிகளும் போராட்டத்தைக் கைவிட வேண்டும். தமிழகத்தில் இயல்புநிலை திரும்பி, அமைதியை நிலைநாட்ட வேண்டும். வரும் 9-ம் தேதி காவிரி தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரும். அன்றைய தினம் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும். தமிழகத்திற்கு தேவையான தண்ணீர் பெற்று தரப்படும்” என தெரிவித்தார். தலைமை நீதிபதியின் கருத்து ஆறுதல் அளித்த போதிலும், இதுவரை எந்த உத்தரவையும் பின்பற்றாத கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தின் மற்றுமொரு உத்தரவையும் பின்பற்றுமா என்ற கேள்வி எழுகிறது.

கர்நாடக மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அம்மாநிலத்தில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ், மத்தியில் ஆட்சியில் உள்ள பி.ஜே.பி. மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே ஒரே நிலைப்பாட்டோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

 
 

ரயில் மறியல், சாலை மறியல், பந்த், பஸ் ஸ்ட்ரைக் போன்ற எந்தப் போராட்டத்தை தமிழகத்தில் நடத்தினாலும் காவிரிப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுமா என்பது கேள்விக்குறிதான். இந்தியாவின் நெற்களஞ்சியம் என்று போற்றப்பட்டு வந்த தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏற்கனவே பயிரிடும் பரப்பளவு வெகுவாகக் குறைந்து விட்டது. எஞ்சியிருக்கும் நிலங்களில் விவசாயத்தைக் காப்பாற்றவும் தண்ணீருக்காகப் போராட வேண்டியுள்ளது. விவசாயத்திற்கு மட்டுமின்றி குடிநீருக்காகவும் காவிரியை நம்பியே தமிழகத்தின் பெரும்பாலான மாவட்ட மக்கள் இருக்க வேண்டியுள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற மறுத்து, அரசியல் சாசனச் சட்டத்தை மீறும் ஒரு மாநிலத்தைக் கண்டிக்க வேண்டிய மத்திய அரசு, ஆறு வார காலம் முடிந்த பிறகு, ‘ஸ்கீம்’ என்ற வார்த்தைக்கு விளக்கம் கோரி, புதிதாக மனுத்தாக்கல் செய்கிறது. ‘மத்திய அரசைக் கண்டிக்கிறோம்’ என்று சொல்வதற்குக் கூட தைரியம் இல்லாமல் வாய்மூடி மௌனியாக தமிழகத்தில் செயல்படும், ‘மங்குனிப் பாண்டியர்கள்’ தலைமையிலான அ.தி.மு.க அரசு, காலம் கடந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.

மத்திய அரசின் மனு, தமிழகத்தின் வழக்கு போன்றவை எல்லாம், இந்த விவகாரத்தை மேலும் காலம் தாழ்த்தி, பிரச்னையை நீர்த்துப் போகச் செய்யுமே தவிர, உருப்படியான தீர்வை ஏற்படுத்துமா என்பது கேள்விக்குறியே. எனவே, தற்போது மாநிலம் தழுவிய அளவில் நடைபெறும் போராட்டங்கள், பந்த், ரயில் மறியல், ஆர்ப்பாட்டம் எல்லாமே தீர்வை நோக்கிய நகர்வை முன்னெடுத்துச் செல்லுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

“வானம் அழுதால்தான் பூமியே செழிக்கும்”… தமிழகத்தைப் பொறுத்தவரை, கர்நாடகத்தின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அளவுக்கு அதிகமாக மழைப் பொழிவு இருந்தால் மட்டுமே, தமிழகத்திற்கு உரிய தண்ணீர் கிடைக்கும். அதுவும் கர்நாடக அணைகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற அடிப்படையில்தான்… எனவே காவிரிப் பிரச்னை கானல் நீர்தான்…

 

Source:- Vikatan|தமிழன் எக்ஸ்பிரஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...