அதிரை எக்ஸ்பிரஸ்:- சென்னையில் கஞ்சா மூட்டைகளுடன் பயணம் செய்த கஞ்சா வியாபாரிகளை சாமர்த்தியமாக ஆட்டோ ஓட்டுநர் போலீஸாரிடம் பிடித்துக் கொடுத்தார். இதில் இருவர் தப்பி ஓட பெண் ஒருவர் மட்டும் பிடிபட்டார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் சவாரிக்காக காத்திருந்தார். அதிகாலை 2.30 மணி அளவில் ஆண்கள் இரண்டு பேரும், பெண் ஒருவரும் கையில் மூட்டைகளுடன் வந்தனர். எழும்பூர் ரயில் நிலையம் செல்ல வேண்டும் என பேரம் பேசி ஆட்டோவில் பயணம் செய்தனர். அவர்களை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அரசு பொது மருத்துவமனை அருகே வரும்போது ஆட்டோவில் கஞ்சா வாசம் வீசுவதை ஆட்டோ ஓட்டுநர் அறிந்துள்ளார்.
உடனடியாக ஆட்டோவை நிறுத்திக் கேட்டால் தம்மை அவர்கள் தாக்கிவிட்டு தப்பிச் செல்லக்கூடும் என்பதால் அவர்களை சாமர்த்தியமாகப் பிடிக்க நினைத்தார். அவர்களிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே சாலையில் போலீஸார் உள்ளார்களா என்று நோட்டம் பார்த்துக்கொண்டே வந்துள்ளார்.
பூங்கா ரயில் நிலையம் அருகில் வரும்போது அங்கு பெரியமேடு போலீஸாரின் ரோந்து வாகனம் இருப்பதை பார்த்து சட்டென்று ஆட்டோவை ரோந்து வாகனம் அருகே நிறுத்தியுள்ளார். ஆட்டோ வேகமாக வந்து நிற்பதைப் பார்த்த ரோந்துப்பணியில் இருந்த பெரியமேடு எஸ்.எஸ்.ஐ கிருஷ்ணமூர்த்தி என்னவென்று கேட்டுள்ளார்.
ஆட்டோ போலீஸ் வாகனத்தில் அருகில் நிற்கவும் ஓட்டுநர் இறங்கி போலீஸாரிடம் வேகமாகச் செல்வதை பார்த்த இரு கஞ்சா வியாபாரிகளும் உஷாராகியுள்ளனர். ஆட்டோ ஓட்டுநர் போலீஸாரிடம், ‘கஞ்சா வாசனை அடிக்கிறது. ஆட்டோவில் வந்த பயணிகள் கஞ்சா கடத்தி வருவதாக சந்தேகம் உள்ளது’ என்று கூறியுள்ளார்.
இதைக்கேட்டு போலீஸார் ஆட்டோ அருகில் செல்வதற்குள் ஆட்டோவிலிருந்த 3 பேரும் இறங்கி தப்பி ஓட முயன்றனர். ஆனால் அதற்குள் போலீஸார் ஒரு பெண்ணை மட்டும் பிடித்துவிட்டனர். ஆண்கள் இருவரும் கஞ்சா மூட்டைகளுடன் பார்க் ரயில்வே ஸ்டேஷன் வழியாக தப்பி ஓடிவிட்டனர்.
பிடிபட்ட பெண் பயணியை சோதனையிட்டபோது அவரிடம் கஞ்சா இருப்பது உறுதியானது. அவர் பெயர் செல்வி (40) என்பதும் திண்டுக்கல் மாவட்டம் வேடச்ந்தூர் பெருமாள் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் எனபதும் தெரியவந்தது. தப்பி ஓடிய நபர் பெயர் பாலமுருகன் (44) என்றும், அவர் திண்டுக்கல்லை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. இன்னொரு நபர் பெயர் தெரியவில்லை.
செல்வியும் அவருடன் வந்த ஆண்கள் இருவரும் சேர்ந்து திண்டுக்கல்லிலிருந்து ஆந்திர மாநிலம் விஜயவாடா சென்று அங்கிருந்து 10 கிலோ கஞ்சாவை வாங்கியுள்ளனர். பின்னர் மீண்டும் ரயிலில் சென்னை சென்ட்ரல் வந்து அங்கிருந்து எழும்பூர் சென்று திண்டுக்கல் செல்ல திட்டம் போட்டுள்ளதும் தெரியவந்தது.
ஆனால் அதற்குள் ஆட்டோ டிரைவர் பிடித்துக் கொடுத்துவிட்டார். தப்பி ஓடிய இருவரும் கஞ்சா மூட்டையை தூக்கிக்கொண்டு ஓடிவிட்டனர். செல்வியிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். செல்வியின் தகவலை அடுத்து அவர்களை பிடிக்கும் முயற்சியில் பெரியமேடு போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
கஞ்சா கடத்தல் கும்பலை சாமர்த்தியமாக பிடித்துக் கொடுத்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் பாராட்டினர்.
தி இந்து