கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை கஜா புயல் சூறையாடியது. இதனால் பல இடங்களில் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. புயலால் தென்னை விவசாயிகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று பட்டுக்கோட்டை வாசுகி திருமண மண்டபத்தில் கஜா புயலின் போது தென்னை மரங்களை இழந்த விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
பாரத் பெட்ரோலியம், சிவகாசி முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி, KSR கல்லூரியின் 2002-2004ஆம் ஆண்டு ஐடி துறையைச் சார்ந்த மாணவர்கள் ஆகியோருடன் இணைந்து பட்டுக்கோட்டை இந்திரா காந்தி யூத் ஃபவுண்டேஷன் சார்பில் இந்த தென்னை மரங்கள் வழங்கப்பட்டன.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய கமிட்டி உறுப்பினர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தென்னை விவசாயிகளுக்கும் புயலால் தென்னை மரங்களை இழந்தவர்களுக்கும் தென்னை மரங்கள் வழங்கப்பட்டன.