அதிரையில் கடந்த முறை நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் திமுகவின் சார்பில் போட்டியிட்ட அஸ்லம் அவர்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அதிராம்பட்டினம் திமுகவின் செல்வாக்கு அதிகமுள்ள பகுதி என்பதால் கடந்த முறையும் திமுகவே வெற்றி பெற்றது!
இதற்கு முன்னர் 40 ஆண்டுகாலம் அதிரையை ஆண்ட பாரம்பரிய பின்னணியை கொண்ட அக்குடும்பம் திமுகவின் கூட்டணியால் மட்டுமே அதிரையை ஆள சாத்தியமானது.
இந்நிலையில் திராவிட கட்சிகளுக்கு இணையாக தமிழக அளவில் பல இயக்கங்கள் உருவாகி தனது கிளையை அதிரையில் அமைத்துள்ளது !
இது வரும் தேர்தல்களில் காலுன்ற செய்யும் முயற்சியே அன்றி வேறில்லை.
அந்த வகையில் சொல்லத்தக்க வகையில் முன்னேற்றம் அடைந்திருப்பது நாம் தமிழர் என்ற இயக்கம். இதில் குறிப்பாக அயல் நாடுகளில் வசிக்கும் பெரும்பாலான அதிரையர்கள் நாம் தமிழரின் பக்கம் ஈர்க்கப்படுகிறார்கள்.
இதற்கு காரணமும் இருக்கத்தான் செய்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இஸ்லாமியர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்காமல் துரோகமிழைத்தன. இருப்பினும் பாஜகவை வீழ்த்துவதற்கு என்ற ஒற்றை காரணத்தால் தான் திமுக கூட்டணியின் பக்கம் முழுமையாக தங்களின் வாக்கை செலுத்தினர்.
இந்த நிலை அதிரையில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதிலும் உள்ள மக்கள் பாசிசத்திற்கு எதிராக வாக்களித்தனர். இதன் பின்னரே திமுக கூட்டணி மகத்தான வெற்றியை ஈட்டியது.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகளை மாநில தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது.
இன்னும் ஓரிரு மாதங்களில் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் அதிரையில் திமுக, அதிமுக, நாதக இடையே கடும் போட்டி நிலவ வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
அதிரையை பொறுத்தமட்டில் திமுகவில் பலரும் வாய்ப்பு கேட்டு காத்திருப்பதாக தகவல்கள் வருகின்றது.
இதில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் சுயேட்சையாக போட்டியிடும் சூழலும் நிலவுகின்றன. இதனால் வாக்குகள் பிரிந்து செல்லும் நிலை உருவாகலாம் .
இந்த இடைவெளியை திமுகவின் கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இதனிடையே நாம் தமிழர் கட்சியில் வெகுவாக இளைஞர்கள் சேர்ந்து வருவதாக இம்முறை இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஊர்களில் அதிராம்பட்டினம் உட்பட பல பகுதிகளில் கொஞ்சம் டஃப் கொடுப்பது உறுதியாகி விட்டது.