கனடாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவ் தலைமையிலான லிபரல் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது.
338 இடங்களைக் கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெற்று முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 157 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஷீரின் கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. லிபரல் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் சிறு கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்கவுள்ளார் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவ்.
உலகில் மிஞ்சியிருக்கும் தாராளவாத மற்றும் இடதுசாரி கொள்கை கொண்ட ஒரே தலைவர் என்று பெயர் பெற்றவர்தான் கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. உலகில் ஜனநாயகம் பாதிப்பில்லாமல், மதிக்கப்படும் நாடுகளில் கனடாவும் ஒரு நாடு ஆகும். உலகம் முழுக்க நாடு இல்லாமல் அவதிப்படும் மக்களுக்கு கனடாதான் வாழ்வளித்து வருகிறது.
இலங்கை தமிழ் அகதிகள் தொடங்கி சிரியா அகதிகள் வரை கனடாவில் லட்சக்கணக்கில் அகதிகள் குடியேறி உள்ளனர். அகதிகளுக்கு அந்நாடு நிறைய சிறப்பான திட்டங்களை கொண்டு வந்துள்ளது. கனடாவில் குடியேற பல நாட்டை சேர்ந்த மக்கள் விருப்பப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உலகம் முழுக்க பல கோடி மக்களால் மதிக்கப்படுகிறார். இவருக்கு தமிழ் மொழி மீது கூடுதல் பாசம் இருக்கிறது. இதனால் தமிழர்கள் மத்தியில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவ் மிகவும் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் பாஜக, பிரான்சில் போரிஸ் ஜான்சன், அமெரிக்காவில் டிரம்ப் என்று உலகம் முழுக்க வலதுசாரி கொள்கை கொண்ட கட்சிகள்தான் தற்போது ஆட்சியில் இருக்கிறது. கனடாவில் அதேபோல் நிலை ஏற்படும் என்று கூறப்பட்ட நிலையில், ஜஸ்டின் ட்ரூடோவ் அவை அனைத்தையும் தவிடுபொடியாக்கியிருக்கிறார்.