தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை அதன்பின் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. அந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், தற்போது புயலாக மாறியுள்ளது. அந்தப் புயலுக்கு ஏற்கனவே ஃபானி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி ஃபானி புயல் நேரடியாக தமிழக கரையைக் கடக்க வாய்ப்பில்லை எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் புயல் குறித்து தமிழக மக்கள் அச்சப்பட தேவையில்லை. அதேசமயம் இந்த புயலால் மழை வருமா ? வராதா ? என்பது குறித்து புயல் நகர்வைப் பொறுத்தே தெரியவரும் என கூறப்படுகிறது.
இதனிடையே தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் இதுகுறித்து கூறுகையில், புயல் ஒருவேளை தமிழகத்தை நெருங்கி வந்தால் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதேசமயம் புயல் விலகி சென்றுவிட்டால், நிலப்பரப்பின் ஈரப்பதம் வெகுவாக குறைந்து தமிழகத்தில் கடுமையான அனல் காற்று வீசக்கூடும் என கூறியுள்ளார். இருப்பினும் அந்த நிலவரம் புயல் நகர்வைப் பொருத்து நாளையே தெரியவரும் என கூறியுள்ளார்.