உம்ரா பயணம் மேற்கொண்ட பத்மஸ்ரீ விருது அறிவிக்கப் பட்ட பசூல் ரஹ்மானுக்கு திருச்சியில் அதிரை சகோதரர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு ஜே.சி.கே நகரில் வசிக்கும் சிராஜுதீன், நசீமுன்னிஷா இவர்களின் மகன் பசூல்ரஹ்மான்(16). இவர் செங்கல்பட்டு-காஞ்சிபுரம் சாலையில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வருகிறார்.
இந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன் இந்திய பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார் பசூல்ரஹ்மான். இந்தியாவில் படிக்கின்ற அனைத்து மாணவர்களும் மாதத்திற்கு ஒரு ரூபாய் வீதம் சேமிப்பு செய்து அந்த தொகையை மத்திய அரசு மூலமாக சேமிக்கப்பட்டு, அதன் மூலமாக இந்தியாவில் உள்ள ஏழை மற்றும் ஆதரவற்ற மாணவர்களுக்கு கல்வி பயில உதவவேண்டும், இதற்கான புதிய சட்டத்தினையும் பரிசீலனை செய்து மத்திய அரசு அமுல்படுத்திட வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். மேலும் இத்திட்டத்திற்கு “டாக்டர் அப்துல்கலாம் ஏழை மாணவர்கள் இலவச கல்வி சேமிப்பு திட்டம்” என பெயரும் சூட்டியிருந்தார்.
இது மத்திய அரசின் கவனத்தை ஈர்த்தது. இதனை அடுத்து பசூல் ரஹ்மானுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப் பட்டது. விரைவில் இவர் ஜெனிவா பயணமாகிறார்.
இதற்கிடையே முஸ்லிம்களின் புனித நகரமான மக்காவிற்கு சென்று உம்ரா மேற்கொண்டார். அவருக்கு ஜித்தாவில் ஜித்தா தமிழ் சங்கம் சார்பில் கவுரவம் அளிக்கப் பட்டது. இதனை அடுத்து இன்று வியாழக்கிழமை தாயகம் திரும்பியவருக்கு இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி அதிராம்பட்டினம் கிளை சேர்மன் மரைக்கா இத்ரீஸ், அதிரை அலியார், பைசல் ஆகியோரால் வரவேற்பு அளிக்கப் பட்டது.
முன்னதாக உம்ரா பயணம் மேற்கொண்ட பசூல் ரஹ்மான் ஜித்தா தமிழ் சங்க முன்னாள் நிர்வாகி ரஃபியா அஹமது உள்ளிட்டோர் மக்காவிற்கு வழியனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.