கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இத்தாலி உள்ளிட்ட, நான்கு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான விசாவை இந்திய அரசு ரத்து செய்துள்ளது.
சீனாவில் ஹூபே மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவானது கொரோனா வைரஸ். இப்போது, உலகம் முழுவதும் சுமார் 70 நாடுகளில் பரவி அந்த மோசமான வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரசுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 6 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இத்தாலி, ஈரான், தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மார்ச் 3ம் தேதிவரை, வழங்கப்பட்ட விசாவை மத்திய அரசு இன்று ரத்து செய்துள்ளது. ஏற்கனவே சீன நாட்டுக்காரர்களுக்கு விசா ரத்து செய்யப்பட்டதும், அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்சொன்ன நாட்டின் தூதர்கள், ஐ.நா மற்றும் பிற சர்வதேச அமைப்புகளின் அதிகாரிகள், ஓசிஐ அட்டைதாரர்கள் மற்றும் விமான ஊழியர்கள் இந்தியா வருவதற்கு இந்த கட்டுப்பாடு கிடையாது. ஆனால், அவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை கட்டாயம் என கூறப்பட்டுள்ளது.
சீனா, ஈரான், தென் கொரியா, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு இந்தியர்கள் பயணம் செய்ய வேண்டாம், கொரோனா பாதித்த மற்ற நாடுகளுக்கும் தேவையற்ற பயணங்களை தவிர்த்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.