ஆந்திராவில் 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் 175 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் இரு தேர்தல்களிலுமே ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர்சி கட்சி அமோக வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி இன்று பதவியேற்றார். பதவியேற்பு விழா விஜயவாடாவில் திறந்தவெளி மைதானத்தில் இன்று பகல் 12 மணிக்கு தொடங்கியது.
ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மன் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். முதல்வராக பதவியேற்ற ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆளுநர் நரசிம்மன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்த பதவியேற்பு விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இதனை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.
ஜெகனின் பதவியேற்பு விழாவில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர். முதல்வராக பதவியேற்ற கையோடு ஜெகன் மோகன் ரெட்டி இன்று டெல்லி புறப்படுகிறார்.
இரவு 7 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் ஜெகன் மோகன் ரெட்டி பங்கேற்கவுள்ளார். ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி முதல்முறையாக பதவியேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.