ஆந்திர மாநிலம் கடப்பா அருகே ஏரியில் மூழ்கி உயிரிழந்த நிலையில் 7 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடப்பா மாவட்டத்துக்குட்பட்ட ஒண்டிமெட்டா வனப்பகுதியில் உள்ள ஏரியில் 7 சடலங்கள் மிதப்பதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கடப்பாவில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் உதவியுடன் ஒண்டிமெட்டா போலீசார் சடலங்களை மீட்டனர்.
சடலத்தின் அருகே உணவுப்பொருட்கள் மற்றும் உடைகள் அடங்கிய பைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. தற்போது வரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஏதேனும் உடல்கள் உள்ளதா என தேடுதல் நடத்தி வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில், நேற்றிரவு ஏரிப்பகுதியில் செம்மரம் வெட்ட சிலர் வந்ததாகவும் அவர்களை போலீசார் விரட்டி சென்றபோது தப்பிக்க முயன்று ஏரியில் குதித்து உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது.
இதனிடையே இவர்கள் 7 பேரும் ஆந்திர வனத்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டு, கொலையை மறைப்பதற்காக ஏரியில் உடல்கள் வீசப்பட்டதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.