தமிழகம் முழுவதும் ஜனவரி 1 முதல் மறுசுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியிலும் பொதுமக்களும், வியாபாரிகளும் பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை பயன்படுத்துவதை நிறுத்த துவங்கிவிட்டனர்.
இந்நிலையில், இது குறித்து அதிரை பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ் அவர்கள் கூறுகையில்:-
ஜனவரி 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் (பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தட்டுகள் போன்ற) அனைத்துமே தமிழக அரசு முற்றிலும் தடை செய்துள்ளது.
அரசின் உத்தரவின்படி அதிரை பேரூராட்சி ஊழியர்களை கொண்டு முதற்கட்டமாக வீதி ஓரம் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகளை கைப்பற்றினார்கள்.அதுமட்டுமின்றி, அதிரை பேரூராட்சி ஊழியர்கள் அதை தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் வகையில் “அழிவில்லா பிளாஸ்டிக் முற்றிலும் மண்ணுக்கும் விண்ணுக்கும் கேடானது” என்று எடுத்துரைக்கும் வகையில் எந்தெந்த வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த கூடாது என்ற பட்டியலிட்ட ஒவ்வொரு வியாபார ஸ்தலத்திலும் ஒட்டியிருப்பதாகவும் கூறினார். அதுமட்டுமின்றி, அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசின் உத்தரவை மீறி பிளாஸ்டிக் பைகள் கடைகளில் கொடுத்தால் அரசின் உத்தரவின் படி அந்த கடையின் உரிமை ரத்து செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றார்.