போதைப்பொருள் , சமூகத்தை முற்றிலும் அழிக்கும் ஒரு கொலைகாரனை போன்றது. அனைத்து வகையான நோய்களுக்கும் முன்னோடியாக இருப்பது போதைப்பொருள் பயன்பாடு. அந்த கொடிய போதை என்னும் அரக்கன் இன்று தமிழகத்தில் தலைதூக்கி வருகிறது என்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பது மற்றும் போதைபொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவது என்பது அரசுகளின் கடமையாக உள்ளது.
போதைப்பொருட்களை பயன்படுத்துதல் , போதைப்பொருட்களை கடத்துதல் , போதை பொருள் விற்பனை ஆகியவற்றை ஒழிக்க கடுமையான சட்டங்கள் மூலம் அரசுகள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன. ஆனாலும் இதன் பயன்பாடு அதிகரிக்கின்றதே தவிர குறையவில்லை. தினமும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
ஹெராயின் , அபின் , கஞ்சா உள்ளிட்ட பலவகையான போதைப்பொருட்கள் சட்டத்துக்கு புறம்பாக விற்பனை செய்யப்படுகிறது. போதைப்பொருள் பயன்படுத்தி , அவர்களை மட்டுமல்லாமல் , தங்களை சார்ந்திருக்கும் குடும்பத்தையும் சீரழிக்கின்றனர். சிலர் போதைப் பொருட்கள் பயன்படுத்தாமல் இருக்க முடியாத அளவுக்கு , அதற்கு அடிமையாகி உள்ளனர்.
இன்றைய சூழலில் தமிழகத்தில் இளைஞர்கள் மட்டுமல்லாமல், பள்ளி மாணவர்களும் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருவது என்பது வருத்தமான விஷயம். இம்மாதிரியான மாணவர்களுக்கு சரியான விழிப்புணர்வு வழங்கி அப்பழக்கத்தில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் புறவாசல் வழியாக இன்றளவும் தேசிய நெடுஞ்சாலைகளில் மது விற்பனை நடைபெறுகிறது. தமிழகத்தில் இன்று நடைபெறும் பெரும்பாலான சாலை விபத்துகளுக்கு மது தான் முக்கிய காரணமாக இருக்கிறது.
குட்கா , பான்மசாலா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இன்றளவும் இயல்பாகவே கிடைக்கின்றன. தமிழகத்தில் இன்று ஐந்தில் நால்வர் ஏதாவது ஒரு போதை பொருளுக்கு அடிமையானவராக இருக்கின்றார்.
தமிழகத்தில் மிகப்பெரிய மனித ஆற்றலும் பொருளாதாரமும் இந்த போதையினால் வீணடிக்கப்படுகிறது. எத்தனையோ பல குடும்பங்களில் நிலவும் பிரச்சனைகளுக்கு இந்த போதையே அடிப்படை காரணியாய் திகழ்கிறது. இந்த தீய போதை பழக்கத்திற்கு அடிமையாகியுள்ள தமிழக பள்ளி , கல்லூரி மாணவர்களும் போதை வஸ்துக்களை உட்கொள்பவர்களும் திருந்தப்போவது என்றோ ?
ஆக்கம் : அன்சர்தீன்