குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதை தடை விதிக்க வேண்டும் மாவட்ட ஆட்சியருக்கு அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 கோரிக்கை.
அதிராம்பட்டினம் பேரூராட்சி தெருக்களில் நேற்று (26.10.2018) வெள்ளிக்கிழமை காலை நேரத்தில் 14 வயதுக்குட்பட்ட 3 சிறுமிகள் இஸ்லாமிய முறையில் உடை அணிந்து வீடு வீடாக சென்று பிச்சை எடுப்பதை லயன்ஸ் கிளப் மாவட்ட தலைவர் பேராசிரியர். சையது அகமது கபீர் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் கண்காணித்து வந்தனர்.
பின்னர் அந்த குழந்தைகளிடம் விசாரணை செய்ததில் பேராவூரணிக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பள்ளிக்கூட மாணவிகள் என்றும், மாணவிகளின் பாட்டியுடன் வந்து பிச்சை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவித்தனர்.
பின்னர் சைல்டு ஹெல்ப் லைன் தொலைபேசி எண் 1098 தகவல் தெரிவித்ததின் பேரில், தஞ்சாவூரிலிருந்து சைல்டு லைன் அமைப்பை சேர்ந்தவர்கள் குழந்தைகளையும், அவரது பாட்டியையும் அதிராம்பட்டினம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். குழந்தைகளின் பெற்றோருக்கு தஞ்சாவூர் சைல்டு லைன் அமைப்பினர் தகவல் தெரிவித்தனர்.
எனவே, அதிராம்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையங்கள், மற்றும் வீடு தோறும் பிச்சை எடுக்கும் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதை மாவட்ட நிர்வாகம், காவல்துறை, சைல்டு லைன் அமைப்பின் மூலம் கண்காணித்து தடை விதிக்க வேண்டும் எனவும், தொடர்ந்து இப்பகுதிகளில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த வேண்டும் எனவும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.