கடந்த நவம்பர் 15ம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயலால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டது. கஜா புயல் தாக்கிய தினத்திலிருந்தே சமுதாய இயக்கங்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டனர். அதேபோல் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பிலும் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் துரிதமாக செய்யப்பட்டன.
இதன் அடுத்த கட்டமாக பாப்புலர் ஃப்ரண்ட் ‘வீடு கட்டும் திட்டத்தை’ (Housing Project) கையிலெடுத்து திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களில் நூறு வீடுகளும், நாகை மாவட்டத்தில் முப்பத்தைந்து வீடுகள் என மொத்தம் நூற்றி முப்பத்தைந்து வீடுகள் கட்டிக் கொடுத்து பாதிக்கப்பட்டவர்களை மீள் குடியேற்றம் செய்திட வேண்டும் என திட்டமிட்டிருந்தது. அதன் படி வீடுகளை கட்டும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த பணிகள் நடைபெற்று வரும் பகுதிகளான திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர், அத்திக்கடை ஆகிய பகுதிகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத்தலைவர் எம். முஹம்மது சேக் அன்சாரி நேற்று (06.02.2019) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின் போது மாநில செயற்குழு உறுப்பினர் நவாஸ் மற்றும் கூத்தாநல்லூர் நகர செயலாளர் H.முஹம்மது ரிஸ்வானுதீன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.