பீகார் மாநிலம் பெகுசாரை மாவட்டத்தில் இஸ்லாமியர் என்பதற்காக அவரை ராஜீவ் யாதவ் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் மிகப் பெரும் வெற்றியை பா.ஜ.க பெற்றுள்ள நிலையில் இன்று இரவு மோடி இரண்டாவது முறை பிரதமராக பதவியேற்கவுள்ளார். மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில், இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் நாடு முழுவதும் தொடர்ந்து வருகிறது. கடந்த நான்கு தினங்களில் மூன்று இடங்களில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது.
பீகார் மாநிலம் பெகுசாராய் மாவட்டத்தில் முகமது குவசிம் என்பவர் சோப்பு விற்பனை செய்யும் பணி செய்துவருகிறார். அவர், கடந்த 26ம் தேதி இரவு பணி முடிந்து வீடு திரும்பியுள்ளார். அப்போது அங்கு வந்த ராஜீவ் யாதவ் என்பவர் முகமதுவை தடுத்து நிறுத்தியுள்ளார். இதுதொடர்பாக முகமது பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. அந்த வீடியோவில், ‘ராஜீவ் யாதவ்வால் நான் தடுத்து நிறுத்தப்பட்டேன். அவர், என்னுடைய பெயர் என்ன என்று கேட்டார். நான் என்னுடைய பெயரைச் சொன்னேன். நீ, பாகிஸ்தானுக்கு போ என்று கூறி என்னை துப்பாக்கியால் சுட்டார்’ என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
இதுகுறித்து தெரிவித்த முகமது குவசிம், ‘அவர், என்னை மீண்டும் துப்பாக்கியால் சுடப் பார்த்தார். துப்பாக்கியை ரீலோட் செய்யும்போது, நான் அவரை தள்ளிவிட்டு ஒடிவிட்டேன். அப்போது அங்கிருந்த யாரும் உதவிக்கு வரவில்லை. ராஜீவ் துப்பாக்கியை மேல் நோக்கி சுட்டதால் எல்லோரும் பயந்துவிட்டனர். நேராக, எங்கள் கிராமத்து தலைவர் வீட்டுக்கு சென்றேன். அங்கு யாரும் எனக்கு உதவி செய்யவில்லை. பின்னர், காவல்நிலையத்துக்குச் சென்றேன். அவர்கள், என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்’ என்று தெரிவித்தார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளிவந்ததிலிருந்து இஸ்லாமியர்கள் மீது நடைபெறும் மூன்றாவது தாக்குதல் இது. மத்தியப் பிரதேச மாநிலத்தில், மூன்று இஸ்லாமியர்கள் பசு இறைச்சி கொண்டு சென்றதாகக் கூறி, அவர்களை 10 பசு குண்டர்கள் ஒன்று சேர்ந்து மரத்தில் கட்டிவைத்து அடித்தனர். அந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள புகைப்படத்தில், அவர் போபால் தொகுதி பா.ஜ.க எம்.பி பிரக்யா தாகுருடன் இருக்கிறார்.
அதேபோன்று, இரண்டு நாட்கள் முன்னதாக, டெல்லி அருகில் குர்கான் பகுதியில் முகமது பராக்கத் என்பவர் மசூதியில் தொழுகை முடித்து வெளியே வந்துள்ளார். அவரை ஐந்து பேர் சேர்ந்து வழமறித்துள்ளனர். அவர்கள், இந்தப் பகுதியில் தொப்பி (இஸ்லாமியர்கள் அணியும் தொப்பி) அணியக் கூடாது என்று கூறி தொப்பியை பிடுங்கி எறிந்துள்ளனர். பின்னர், அவரைத் தாக்கி ஜெய் ஸ்ரீராம் சொல்ல வைத்துள்ளனர். பின்னர், பன்றிக் கறி சாப்பிடச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர். இந்த தொடர் வன்முறைச் சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.