மேட்டுப்பாளையம் அருகே பள்ளி வாகனத்தில் எல்கேஜி குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த ஓட்டுநர், நடத்துநர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள காரமடை பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஊமப்பாளையம் பகுதியைச் சேர்ந்த நான்கு வயது பெண் குழந்தை, எல்.கே.ஜி வகுப்பில் படித்து வருகிறது. இக்குழந்தை, நாள்தோறும் பள்ளிப்பேருந்தில் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது பேருந்தில் ஓட்டுனர் கோவிந்தராஜ் மற்றும் நடத்துனர் மாரிமுத்து ஆகியோர் அக்குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளனர். வீடு திரும்பிய குழந்தையின் உடலில் உள்ள காயங்களால் சந்தேகமடைந்த பெற்றோர் இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விசாரணை நடத்தியதில் பேருந்து ஓட்டுனர், நடத்துனர் இதற்கு காரணம் என்பதை அறிந்து குழந்தையின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் தகவலறிந்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உரிய சிகிச்சை மற்றும் நிவாரணம் வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.