ஜனவரி 28-ம் தேதி திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. ஜனவரி 31-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளது.
திருவாரூர் தேர்தலுக்கான திமுக வேட்பாளரை தேர்வு செய்வதற்கான நேர்காணல் இன்று மாலை நடந்தது. சென்னை அறிவாலயத்தில் திமுக வேட்பாளர் நேர்காணல் நடந்தது. நேர்காணல் முடிவில் திமுக வேட்பாளராக திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 4 நாட்களாக திமுக திருவாரூர் வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வந்தது. திருவாரூர் மாவட்ட நிர்வாகிகளுடன் திமுக தலைவர் ஸ்டாலின் மூன்று முறைக்கும் மேல் கூட்டம் நடத்தினார். திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணனை ஸ்டாலின் இரண்டு முறை சந்தித்தார்.
இந்த நிலையில் இந்த தேர்தலில் போட்டியிட நேற்று பலர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். திமுக தலைவர் ஸ்டாலின் சார்பாக 20க்கும் அதிகமானோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் சார்பாக 40 பேர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். உதயநிதி ஸ்டாலின் போட்டியிட அவரது ரசிகர்கள் சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து விருப்பமனு மீதான பரிசீலனை இன்று நடந்தது. விருப்பமனு தாக்கல் செய்வதர்கள் இன்று நேர்முக தேர்விற்கு அழைக்கப்பட்டனர். உறுப்பினர்களுடன் அதன்பின் ஆலோசனை நடந்தது. நேர்முக தேர்வு சுமார் 1.30 மணி நேரம் நடந்தது.
இந்த நிலையில் திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட போகும் திமுக வேட்பாளராக திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பூண்டி கலைவாணன் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்காக தேர்தலின் போது கடுமையாக பிரச்சாரம் செய்தவர். திமுகவின் திருவாரூர் அடையாளமாக இவர் திகழ்கிறார். இவர் திமுகவின் மிகவும் வலுவான நபராக பார்க்கப்படுகிறார்.