காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.
காவிரி விவகாரத்தில் இதற்கு பிறகு மேல் முறையீடு இல்லை என்று கூறி, இறுதி தீர்ப்பு அளித்த உச்சநீதிமன்றமானது மார்ச் மாதம் 29ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு முடிவடைந்ததை தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் மத்திய அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கில் “ஸ்கீம்” என்ற வார்த்தைக்கு விளக்கம் கோரி மத்திய ஒரு மனுவை தாக்கல் செய்தது.
மேலும் கர்நாடகாவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு அதில் தெரிவித்தது.
தமிழக அரசின் மனுவோடு, மத்திய அரசின் மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் இரு வழக்குகளையும் இன்று (ஏப்ரல் 9) விசாரிப்பதாக தெரிவித்திருந்தது.
இது தொடர்பான முடிவுகள் இன்று வெளியாக இருப்பதால், இரு தரப்பிலும் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.