நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் வென்று தொடரை கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் இன்று 4வது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் இன்று காலை 7.30 மணியளவில் தொடங்கியது.
டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கியது. விராட் கோலிக்கு பதிலாக 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய இளம் பேட்ஸ்மேன் சுப்மன் கில் அறிமுக வீரராக களமிறங்கினார். மேலும் முகம்மது சமிக்கு ஓய்வளிக்கப்பட்டு, கலீல் அகமது களமிறக்கப்பட்டார்.
இந்திய அணிக்கு ரோகித் சர்மா – ஷிகர் தவான் ஜோடி துவக்கம் தந்தனர். நியூசிலாந்து பந்துவீச்சாளர் ட்ரெண்ட் போல்டின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து தங்களுடைய விக்கெட்டை பறிகொடுத்தனர். இறுதியில் இந்திய அணி 30.5 ஓவரில் 92 ரங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் 18 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.