உலகெங்கிலும் 100 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுடன் சமூக வலைதள உலகில் வாட்ஸ் அப் நிறுவனம் கோலோச்சி வருகிறது. நம்மில் பெரும்பாலானவர்கள் காலையில் எழுந்தவுடன் வணக்கம் சொல்வது முதல் இரவில் குட் நைட் அனுப்புவது வரையில் எண்ணற்ற செய்திகளை நாள்தோறும் வாட்ஸ் அப் மூலமாக பகிர்ந்து வருகிறோம். அந்த அளவுக்கு அத்தியாவசியமானதாக இருக்கிறது அந்தச் செயலி.
இந்நிலையில் குறிப்பிட்ட சில வகை ஸ்மார்ட் போன்களில் தங்கள் சேவை இனி கிடைக்காது என்று வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. Nokia S-40 சீரிஸில் வந்த போன்களை இந்தியாவில் பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் வாங்கினர். அந்த வகை போன்களில் வாட்ஸ் அப் பயன்படுத்துவோருக்கு 2019 ஜனவரியில் இருந்து அந்த சேவை இனி கிடைக்காது.
ஆண்டிராய்டு 2.3.7. ஜின்ஜெர்பேடு அல்லது அதற்கு முந்தைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவோருக்கு பிப்ரவரி 1ம் தேதி முதல் வாட்ஸ் அப் செயல்படாது. அதேபோன்று ios 7 தொழில்நுட்பத்தில் இயங்கும் போன்ளுக்கும் பிப்ரவரி முதல் வாட்ஸ் அப் செயல்படாது.
எதிர்காலத்தைக் கணக்கில் கொண்டு, புத்தம் புதிய வசதிகளுடன் வாட்ஸ் அப் செயலியை மேம்படுத்தும்போது, அதை ஏற்றுக்கொள்ளும் திறன் அற்றதாக இருப்பதாலேயே குறிப்பிட்ட இந்த வகை செல்போன்களில் வாட்ஸ் அப் சேவை நிறுத்தப்படுவதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.